சமையல் அறையில் அதிக நேரம் செலவழிக்காமல், விரைவாகவும் சுவையாகவும் ஒரு குழம்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், "அப்பள குழம்பு" தான் சரியான தேர்வு. வெறும் ஐந்து நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய இந்த செய்முறை, குறிப்பாக சமையல் தெரியாதவர்களுக்கும், அவசரமாக சமைக்க வேண்டியவர்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதனை எப்படி செய்வது என்று வாட்2குக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10-12
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் பால் - 1/2 கப்
வெல்லம் - 1/2 டீஸ்பூன்
அப்பளம் - 5-7
கொத்தமல்லி
செய்முறை:
முதலில் அப்பளத்தைப் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அடுத்ததாக, நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கி வதங்கும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்குங்கள். அனைத்தும் வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர், கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும். குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். குழம்பை மிதமான தீயில், மூடி போட்டு 3-7 நிமிடங்களுக்கு வேக விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும், பொரித்து வைத்த அப்பளங்களை சிறு துண்டுகளாக உடைத்து குழம்பில் சேர்க்கவும். அப்பளத்தை சேர்த்த பிறகு, மூடி போட்டு 1-2 நிமிடங்களுக்கு வேக வைத்து அடுப்பை அணைக்கவும். (விரும்பினால் தேங்காய் பால் மற்றும் வெல்லம் சேர்க்கலாம்).
சுவையான அப்பளக் குழம்பு தயார். இதை சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.