சேனைக் கிழங்கில் குழம்பு, பொரியல் சமைத்து சாப்பிட்டிருப்போம். விசேஷ வீடுகளில் இதில் வறுவல் (சில்லி போன்று) செய்து வைத்திருப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்று நீங்களும் நினைத்திருக்கலாம். கவலை வேண்டாம். சேனைக் கிழங்கு வறுவல் ரெசிபி இங்கே.
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு - 250 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் சேனைக் கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் குக்கர் வைத்து சேனைக் கிழங்கை சேர்த்து 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். இப்போது வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு ஸ்டைல் சேனைக் கிழங்கு வறுவல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“