சமையல் என்பது ஒரு கலை. சமையலில் சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
டிப்ஸ் 1: தேங்காய் துருவலைப் பாதுகாக்க
சமையல் செய்யும்போது தேங்காய் துருவல் உபயோகிப்பது வழக்கமான ஒன்று. ஆனால், சில சமயங்களில் சமைத்தது போக மீதமாகும் தேங்காய் துருவலை என்ன செய்வது என்று யோசிப்போம். அதனை வீணாக்காமல், சில நாட்கள் வரை புதிதுபோல் பாதுகாக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
மீதமான தேங்காய் துருவலை ஒரு கடாயில் போட்டு, அதனுடன் கொஞ்சமாகத் தூள் உப்பைச் சேர்க்கவும். பின்னர், ஒரு நிமிடம் போல நன்கு வறுக்க வேண்டும். இப்படி வறுத்த தேங்காய் துருவலை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் (airtight container) போட்டு வைத்தால் போதும்.
இந்த முறையில் பாதுகாக்கப்பட்ட தேங்காய் துருவல் இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. மேலும், அதன் சுவையும் அப்படியே இருக்கும். இனி தேங்காய் துருவல் மீதமானால், கவலைப்படாமல் இந்த எளிய குறிப்பைப் பயன்படுத்திப் பாதுகாக்கலாம்.
டிப்ஸ் 2: மொறுமொறு ரவா தோசைக்கு
நமது வீடுகளில் வழக்கமாக அரிசி மாவில் சுடும் தோசையை விட, ரவா தோசைக்கு தனிச் சுவையும், மொறுமொறுப்பும் அதிகம். ஆனால், சில சமயங்களில் ரவா தோசை தோசைக்கல்லில் ஒட்டிக்கொள்வதுண்டு. இந்தச் சிக்கலைத் தவிர்த்து, மாவு ஒட்டாமல், மொறுமொறுப்பான மற்றும் சுவையான ரவா தோசை சுடுவதற்கு ஒரு எளிய வழி உள்ளது.
ரவா தோசைக்கு மாவு கலக்கும்போது, அதனுடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவைச் சேர்க்கவும். இந்தச் சிறு மாற்றம் உங்கள் ரவா தோசையை இன்னும் சுவையாகவும், கமகமவென்றும், அதேசமயம் தோசைக்கல்லில் ஒட்டாமல் மொறுமொறுப்பாகவும் வரும்படி செய்யும். இந்த எளிய குறிப்பைப் பின்பற்றி இனி உங்கள் ரவா தோசைகளைச் சுட்டு அசத்துங்கள்.