வீட்டு பணிகளிலேயே மிகவும் கடினமானதாக கருதப்படுவது சமையல் வேலை தான். இதனை சுவையாகவும் அதே சமயத்தில் எளிமையானதாகவும் மாற்றக் கூடிய சிம்பிளான டிப்ஸ்கள் இருக்கிறதா என்று யோசித்து இருப்போம். அந்த வகையில், அவற்றை ஈஸியாக மாற்றும் சில ட்ரிக்ஸ்களை இதில் பார்க்கலாம்.
சாதம் உதிரியாக இருந்தால் எல்லோருமே கூடுதலாக ஒரு கரண்டி சாப்பிடுவார்கள். இதற்காக, சாதம் பொங்கி வரும் போது சில துளிகள் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கலாம். இவ்வாறு செய்தால் சாதம் பார்ப்பதற்கு உதிரியாக இருக்கும்.
இதேபோல், தோசை மொறுமொறுப்பாக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது? அதன்படி, தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசியையும் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்தால் தோசை சுவையாகவும், கிரிஸ்பியாகவும் இருக்கும்.
வடக்கூழ் தயாரிக்கும் போது அதில் பச்சை மிளகாயின் அளவை சற்று குறைத்து, அதற்கு பதிலாக இஞ்சியை அரைத்து சேர்க்கலாம். இவ்வாறு செய்தால் மணம் கூடுதலாக இருக்கும். காரத்தன்மையும் சரியான அளவில் இருக்கும்.
ரவை தோசைக்கு மாவு அரைக்கும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கலாம். இது தோசைக்கு கூடுதல் சுவையை கொடுக்கும். இது மட்டுமின்றி மல்லி இரண்டு டேபிள் ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், வேர்க்கடலை இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் வறுத்துப் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை புளியோதரை கிளறியவுடன் அத்துடன் தூவி எடுத்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
சப்பாத்தி, பூரிக்கு செய்யும் குருமாவில் கூடுதல் சுவையை சேர்க்க சிம்பிளான டிப்ஸ் இருக்கிறது. இதற்காக, ஒரு பிடி வேர்க்கடலையை தோல் நீக்கி 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்னர் பொடியாக அரைக்க வேண்டும். இதனை குருமாவுடன் சேர்த்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும். மேலும், வறுத்து பொடியாக்கிய வெந்தயத்தை சாம்பாருடன் சேர்த்தால் அதுவும் நன்றாக இருக்கும்.