/indian-express-tamil/media/media_files/2025/09/11/screenshot-2025-09-11-184833-2025-09-11-18-48-55.jpg)
நீர்க்காய்களில் மிக முக்கியமானது. நாட்டு காய்களில் தவிர்க்கவே முடியாதது. புடலங்காய் இளசாக இருந்தாலும் சரி, முற்றலாக இருந்தாலும், ஒரேமாதிரியான சத்துக்களை தரக்கூடியது. நீர்ச்சத்து காய் என்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். இதனால், மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும். இதன் மூலம் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மலச்சிக்கல் இருந்தாலும் கூட, புடலங்காய் சாறு 2 ஸ்பூன் குடித்தாலே நிவாரணம் கிடைக்கும். வைட்டமின் A, B, C, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், மாங்கனீசு போன்றவைகள் நிறைந்த காய்தான் இந்த புடலங்காய்.
அதை வைத்து ஒரு சுவையான கூட்டு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :
புடலங்காய் - 1/2 கிலோ
கடலை பருப்பு - 200 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
சீராக தூள் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
பெருங்காய தூள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
முதலில் கடலை பருப்பை நன்றாக அலசி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 - 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பின்னர் புடலங்காயை நன்றாக அலசி அதன் தோலை சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தற்போது குக்கரில் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊறவைத்த கடலைப்பருப்பை போட்டுக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு பல் சேர்க்கவும். பின்னர் அவற்றுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீராக தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அனைத்தையும் கலந்துகொள்ளுங்கள்.
இப்போது குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும். இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். குக்கரில் 5 விசில் வந்து பிரஷர் தானாக அடங்கியவுடன் குக்கர் மூடியை திறக்கவும். பின்னர் அடுப்பை ஆன் செய்து குக்கரில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும். தேங்காயின் பச்சை வாசனை போகும்வரை 4 நிமிடங்களுக்கு அதை மூடி வைத்து சமைக்கவும். தற்போது மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தாளித்த பொருட்களை கூட்டில் சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான புடலங்காய் கூட்டு சாப்பிட தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us