/indian-express-tamil/media/media_files/SsAuSGGg6XEyaNnbfTIF.jpg)
வெந்தய தோசை என்பது தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்றாகும். இது மென்மையாகவும், பஞ்சு போலவும் இருக்கும். இது எளிதில் செரிக்கக்கூடிய உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். மேலும் இந்த தோசை செய்யும்போது வரும் வாசனையே உங்களை சாப்பிட தூண்டும். இதனை எப்படி செய்வது என்று தி ஹோம் மேட் குக்கிங் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - ஊறவைக்க
செய்முறை:
முதலில் இட்லி அரிசி, கடலைப்பருப்பு, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அல்லது ஒவ்வொன்றாகத் தனியாகவும் நன்றாகக் கழுவி, வெதுவெதுப்பான நீரில் குறைந்தது 5-6 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியபின் அவற்றை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, மாவு பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, மூடி போட்டு குறைந்தது 12 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
மாவு புளித்தவுடன், தோசை ஊற்றுவதற்கு முன்பு நன்றாகக் கலக்கி, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். ஒரு தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து, எண்ணெய் அல்லது நெய் தடவி, மாவை தோசையாக ஊற்றவும். மென்மையான தோசை வேண்டுமெனில், மாவை மெல்லியதாகத் தேய்க்காமல், சற்று கனமாக ஊற்றவும்.
தோசையின் இருபுறமும் சிவந்ததும் எடுத்து, உங்களுக்கு பிடித்த சட்னி, சாம்பார், இட்லிப் பொடி, தொக்கு, கடப்பா, ஸ்டூ, கோத்சு என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். மாவை கிரைண்டரில் அரைக்கும்போது அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். தோசைக் கல்லை எப்போதும் மிதமான தீயில் வைத்து தோசை சுடவும்.
நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் பயன்படுத்தி தோசை சுட்டால், அதன் சுவையும், மணமும் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த சுவையான வெந்தய தோசையை உங்கள் வீட்டில் செய்து தக்காளி சட்னியோடு சேர்த்து சுவையுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.