/indian-express-tamil/media/media_files/2025/03/19/PIkdeybfp7EoH1ifgVOx.jpg)
சுண்டைக்காய் துவையல் எப்படி தயார் செய்யலாம் என்பது தொடர்பான குறிப்புகளை பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய காய்கறி வகைகளில் சுண்டைக்காயும் ஒன்று. இந்த அற்புதமான சுண்டைக்காயில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும்.
இவை இரைப்பையில் ஏற்படும் அழற்சி அல்லது கணையத்தில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றைக் குறைத்து வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு இவற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் செரிமானத்தை எளிதாக்கி எடையையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.
சுண்டைக்காயில் அதிக அளவில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அனீமியா என்னும் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. அதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் பார்த்துக் கொள்ளும்.
சுண்டைக்காயில் உள்ள சபோஜெனின் என்னும் ஸ்டீராய்டு ஹார்மோன் உற்பத்தியை சீராக்கி உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கும். ஹார்மோன் சமநிலையை சரிசெய்து ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சீர்செய்ய உதவி செய்யும்.
சிறுநீரகக் கற்கள் போன்ற சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தவும் சிறுநீரகத்தின் குளோமருலர் கட்டமைப்புகளின் அடைப்பை நீக்கவும் உதவும். சுண்டைக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
இப்படி ஏராளமான மருத்துவ பயன்களை தன்னகத்தே உள்ளடக்கி வைத்துள்ள சுண்டைக்காயில் சுவையான துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். சுண்டைக்காய் துவையல் எப்படி தயார் செய்யலாம் என்பது தொடர்பான குறிப்புகளை பிரபல சமையல் கலை வல்லுநரான செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதனைப் பின்வருமாறு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
உரலில் நன்கு இடித்த சுண்டைக்காய் - 400 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
கடலை பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - 1 (விருப்பம் இருந்தால் மட்டும் சேர்க்கவும்)
உப்பு
புளி
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதனுடன், உரலில் நன்கு இடித்து வைத்துள்ள சுண்டைக்காய் சேர்த்து நன்றாக சுமார் 7 முதல் 8 நிமிடங்களுக்கு பொரித்து எடுக்கவும். அதனை தனியாக எடுத்து வைத்து விடவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அதில் நெய் சேர்த்து சூடேற்றவும். பின்னர் அதில் கடலை பருப்பு சேர்க்கவும். இவற்றை மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். தொடர்ந்து அவற்றுடன் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர், சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு, ஏற்கனவே வதக்கி வைத்துள்ள சுண்டைக்காய், தேவையான அளவு உப்பு, புளி சேர்த்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
கடாய் சூட்டில் வைத்து அனைத்தையும் நன்றாக வதக்கவும். பிறகு இவற்றை அப்படியே ஆற வைத்துக் கொள்ளவும். இதனை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் விரும்பும் மக்கள் சேர்த்து அரைக்கலாம். ஆனால், தேங்காய் சேர்த்தால் துவையல் சீக்கிரம் கெட்டுப் பொய்விடும். மிக்சியில் அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன், 7 வரமிளகாய் 1 1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்த தாளிப்பு சேர்த்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.