குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுந்தரி அக்கா சமைத்த பன்னீர் குருமா ரெசிபி பலரையும் கவரும் வகையில் அமைந்தது. குறிப்பாக, இந்த ரெசிபியை செஃப் தாமு பெரிதும் பாராட்டி இருந்தார். அதன்படி, சுவையான பன்னீர் குருமா ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்,
பச்சை மிளகாய்,
சின்ன வெங்காயம்,
சீரகம்,
பொட்டுக்கடலை,
சோம்பு,
பட்டை,
ஏலக்காய்,
கிராம்பு,
கசகசா,
முந்திரி பருப்பு,
தயிர்,
எண்ணெய்,
பிரிஞ்சி இலை,
வெங்காயம்,
இஞ்சி - பூண்டு விழுது,
கறிவேப்பிலை,
கேரட்,
உருளைக் கிழங்கு,
உப்பு,
பன்னீர் மற்றும்
கொத்தமல்லி இலை.
செய்முறை:
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் மூன்று பச்சை மிளகாய்கள், 5 அல்லது 6 சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு ஸ்பூன் கசகசா, சிறிதளவு முந்திரி பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது, அடுப்பில் குக்கர் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில், ஒரு பிரிஞ்சி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, சிறியதாக வெட்டிய கேரட் துண்டுகள், பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு மற்றும் அரைத்து வைத்த மசாலா ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.
இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதன் பின்னர், சிறியதாக வெட்டிய பன்னீர் துண்டுகளை கொதிக்கும் குருமாவில் சேர்க்கலாம். இதையடுத்து, சிறிதளவு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பன்னீர் குருமா தயாராகி விடும்.