உணவு என்பது நாம் உயிர்வாழ முக்கிய தேவை. அதுவே சுவையாக இருந்தால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதே போல், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான காலையில் செய்யும் உணவையே மதியம் வைத்துக்கொள்ளும் நிலையும் இருக்கிறது. ஒரு சிலர் தங்கள் வீடுகளில், காலை உணவாக இட்லி தோசை செய்து சாப்பிட்டுவிட்டு, மதிய உணவாக ஏதாவது வெரைட்டி சாதம் செய்து எடுத்துக்கொள்வார்கள்.
குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி வித்தியாசமான உணவை கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் முந்தைய நாள் இரவில் அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பார்கள். நீங்களும் அந்த மாதிரி யோசிக்கும் வழக்கம் உடையவரா? அப்படி என்றால் நீங்கள் என்ன சாதம் செய்தாலும் சரி, அதை செய்யும்பொது இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி செய்யுங்கள். உணவு சுவையாகவும் இருக்கும். அதிகமாக சாப்பிடவும் தோன்றும்.
நீங்கள் மதிய உணவிற்காக தக்காளி சாதம் செய்கிறீர்கள் என்றால், அதில் சிறிதளவு வெந்தயம் ஒரு துண்டு மஞ்சள் மற்றும் பெருங்காயத்தை வாணலியில் வறுத்து பொடித்து வறுத்து பொடி செய்து அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல், சில பல் பூண்டு எடுத்து எண்ணெயில் வதக்கி அரைத்து தக்காளி சாதத்தில் சேர்த்தால், உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
அதேபோல் புளி சாதம் அல்லது புளியோதரை செய்கிறீர்கள் என்றால், சாதம் செய்யும்போதும், புளியோதரையுடன் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வெண்ணையை சேர்த்தால், சாதம் கட்டி கட்டியாக இல்லாமல் சுவையாகவும் இருக்கும். அடுத்து நாம் வீடுகளில் அடிக்கடி செய்யும் சாதங்களில் ஒன்றாக இருக்கும் தயிர் சாதம் செய்யும்போது அதில், வெள்ளரிக்காய் மற்றும் கேரட் துண்டுகளை துருவி கலக்கலாம். மாவடுவை பொடி செய்து சேர்த்தால் சாதம் மணமாக இருக்கும்.
வெஜிடபிள் பிரியாணி செய்கிறீர்கள் என்றால், அரிசியுடன் காய்கறிகளை வேக வைக்காமல், காய்கறிகளுக்காக தனியாக மசாலாவை அரைத்து நெய்யில் வதக்கி அதில் அரிசி சேர்த்து சமைக்க வேண்டும். அதேபோல் காய்களை மிக மெல்லியதாக நறுக்கி தனியாக வதக்கி உப்பு சேர்த்து குறைந்த தீயில் சமைத்து, வேகவைத்த அரிசியுடன் சேர்த்து சமைத்தால், கூடுதல் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும். தேங்காய் சாதம் செய்தால், அதில் வெள்ளை எள்ள வறுத்து சேர்த்தால் சுவை அதிகமாகும்.
புளியோதரை செய்ய புளிக்குழம்பு செய்யும்போது புளி கரைசல் கொதிக்கும்போது வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்தால், சாதமும் குழம்பும் சுவையாக இருக்கும். அதேபோல், வெண்பொங்கல் செய்யும்போது அதில் காராபூந்தி மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கை உதிர்த்து நெய்விட்டு செய்தால், சாப்பிட கூடுதல் சுவையுடன் இருக்கும். நீங்களும் இந்த டிப்ஸ்களை ட்ரைப்பண்ணிப்பாருங்க.