/indian-express-tamil/media/media_files/2024/10/23/QHeIuefLk0OoGtqKxCBv.jpg)
இட்லி மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் அரைப்பது மிகவும் முக்கியம். மாவு ரொம்பவும் நைசாகவோ அல்லது ரொம்பவும் கொரகொரப்பாகவோ இருக்கக் கூடாது. அதே சமயம் இட்லி மாவு அதிகம் புளித்துவிட்டால் இட்லி சரியாக வரவே வராது. சிலர் இட்லிக்கு மாவு அரைத்துவிட்டு, ஒரு வாரம் ப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவார்கள்.
இப்படி பயன்படுத்தும்போது மாவு புளித்துவிட்டால், இட்லி, தோசை என எது செய்தாலும் சுவையாக இருக்காது. உப்பு சேர்க்காமல் மாவை ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி, இறுக்கமாக மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். தேவைப்படும்போது மட்டும் எடுத்து உப்பு கலந்து பயன்படுத்தவும். குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி, அதன்மேல் மாவு பாத்திரத்தை வைக்கலாம்.
மண் பானையில் வைத்தால் மாவு இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும்.
வாழை இலை அல்லது வெற்றிலையை பாத்திரத்தின் அடியில் வைத்து, அதன்மேல் மாவை ஊற்றி மூடி வைக்கலாம். வாழை இலையை மாவின் மேலும் போட்டு மூடலாம். அரைத்த மாவில் 5 ஓமவல்லி இலைகளைப் போட்டால் மாவு புளிக்காது. அதே போல் நமக்கு எளிமையாக கிடைக்கும் வெற்றிலையை எடுத்து, இட்லிக்கு மாவு அரைத்தவுடன், அந்த வெற்றிலையை காம்பு கிள்ளாமல், மாவின் மீது கவிழ்த்துவிட்டால் போதும் 2 நாட்கள் ஆனாலும் இட்லி மாவு புளிக்காது.
அதேபோல் இட்லி மாவு புளித்துவிட்டால், புளித்த மாவில் சிறிது அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை செய்யலாம். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தோசை சுட்டால் மாவில் இருக்கும் புளிப்பு தெரியாது. சர்க்கரை அல்லது வெல்லம் ஒரு ஸ்பூன் சேர்த்தால் புளிப்பு சுவை குறையும் என்று சொல்வார்கள். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.