நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. சாதாரனமாக கிடைக்கும் இந்த இலையில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது, கறிவேப்பிலை செரிமான நொதிகளைத் தூண்டி, உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் கறிவேப்பிலை மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைப்பதை மெதுவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த கறிவேப்பிலை வைத்து துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3-4
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 2-3 பல்
சின்ன வெங்காயம் - 2-3
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1-2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இதனுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பிறகு, சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். கறிவேப்பிலை சுருங்கி, மொறுமொறுப்பான பதம் வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக, புளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்த பொருட்களை ஆற விடவும். ஆறியதும், மிக்ஸியில் வறுத்த பொருட்கள், தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, அரைக்கவும். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் இந்த துவையல் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.