காய்கறி வகைகயில் பலரும் விரும்பாத ஒரு காய் என்றால் அது சுரைக்காய் என்று சொல்வார்கள். ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறுகள், நீர் எரிச்சல், நீர் கட்டு போன்ற பிரச்சனைகள் குறையும். சுரைக்காய் சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
சுரைக்காய் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கோடை காலத்தில் இதை உணவில் சேர்ப்பது நல்லது. அதிக உஷ்ணத்தால் வரும் தலைவலிக்கு சுரைக்காய் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போடலாம். சுரைக்காய் செரிமானத்திற்கு உதவுகிறது. இப்படி பல நன்மைகளை வைத்துள்ள சுரைக்காயில் பிரியாணி செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1 (300-30 கிராம்)
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3
புதினா மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3-4
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 15-20 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில், எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
அடுத்து, நறுக்கிய சுரைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிய அரிசியை அதில் சேர்க்கவும்.
அதன்பிறகு, தண்ணீர் , கரம் மசாலா, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதன்பிறகு, குக்கரை மூடி 2-3 விசில் வரும் வரை வேக வைக்கவும். விசில் முடிந்தவுடன், திறந்து மெதுவாக கிளறி விட்டு எடுத்தால் சுவையான சுரைக்காய் பிரியாணி ரெடி. ட்ரைப்பண்ணி பாருங்க.