திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.
திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும். திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும். திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும். திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.
திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும். திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும். திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.
திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாயு குணமாகும்.
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும். சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேளையும் கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
திப்பிலி குழந்தைகளின் குடல் நோயில் புழு அகற்றுவியாக செயல்படுகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலிப் பொடியை கலந்து கொடுப்பதால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும். திப்பிலி லேகியம் சுவாசம், வயிற்றுவலி, பெருவயிறு, ஜுரம், பாண்டு இவைகளை குணப்படுத்தும். திப்பிலி மூலமாக முகத்தில் உண்டாகும் கருத்த மச்சம், சிவப்பு மச்சம் போகும்.
குங்கிலியம் சேர்த்த திப்பிலிக்காரம் முடக்குவாத நோயை துரிதமாக குணப்படுத்த வல்லது. திப்பிலி விழுதை நெய்யில் பக்குவம் செய்து இந்துப்பூ கலந்து உட்கொள்ளச் செய்தால் இருமல் தணியும். மிளகுடன் கலந்த திப்பிலிப் பொடி மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப் பொடியாக செயல்படுகிறது. யானைத் திப்பிலி, அதிசாரம், இழுப்பு, தொண்டை நோய், கிருமி நோய் ஆகியவற்றை போக்கும்.
சித்த மருத்துவம் குழு
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil