இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடலில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது, அல்லது உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாது. இதன் விளைவாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.
Advertisment
காலப்போக்கில், இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு பாதிப்பு, கண் பாதிப்பு போன்ற பல தீவிர உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோய் டைம் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழித்துவிடுகிறது. இதனால் உடல் இன்சுலினை முற்றிலும் உற்பத்தி செய்யாது. இது டைப் 1 நீரிழிவு நோய். பொதுவாக குழந்தைகள் அல்லது இளம் வயதினரை பாதிக்கிறது.
டைப் 2 நீரிழிவு நோய், மிகவும் பொதுவான வகையாகும். இதில், உடல் இன்சுலினை போதுமான அளவு உற்பத்தி செய்யாது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாது (இன்சுலின் எதிர்ப்பு). இது பெரும்பாலும் வயது வந்தவர்களைப் பாதிக்கிறது, ஆனால் தவறான வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதினரிடமும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியாது என்றாலும், சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
அந்த வகையில் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவர, என்ன வழிமுறை என்பது குறித்து டாக்டர் நித்யா கூறியுள்ளார். சர்க்கரை நோயாளிகள் உணவில் கசப்பு மற்றும் துவர்ப்பு பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்க்கு மருந்து கொடுக்கிறார்கள் என்றாலும், துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை தான் கொடுப்பார்கள். இந்த துவர்ப்பு சுவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து இன்சுலின் அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளையும் குறைக்கும்.
Advertisment
Advertisements
சர்க்கரை நோயாளிகளுக்கு கொத்தவரங்காய் மற்றும் கோவக்காய் ரொம்ப முக்கிய உணவாகும். அதேபோல் பாகற்காயும் சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் காய்கறிகளில் ஒன்று. சர்க்கரையின் அளவு குறையவே இல்லை என்று சொல்பவர்கள் கூட சுண்டைக்காய் பயன்படுத்தலாம். இரும்புச்சத்து, கால்சியம் சத்து, அதிகம் இருக்கும் சுண்டைக்காயை பச்சையாக பயன்படுத்தினால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். சர்க்கரை நோயுடன் சேர்த்து, ரத்த அழுத்தம், மலச்சிக்கல், உள்ளிட்ட பிரச்னைகளையும் சுண்டைக்காய் தீர்க்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.