முருங்கை கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, சி, ஈ, இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த சோகையை சரிசெய்யும், கண் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முருங்கை கீரை முக்கிய பயன்களை கொடுக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், கர்ப்பப்பைக் கோளாறுகளை சரி செய்யும், ஆஸ்துமா, சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும், மூட்டுவலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை கீரை தீர்வளிக்கும்.
இந்த முருங்கை கீரை வைத்து துவையல் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - ஒரு கப்
புளி - ஒரு கோலி அளவு
தேங்காய் துருவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் – 30
உளுத்தம்பருப்பு - 5 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லி இலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை சேர்த்து தாளித்து அதனுடன், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து முருங்கை கீரையை அதில் சேர்த்து, வதக்கவும். கீரை நன்றாக வதங்கியதும் அதில் துருவிய தேங்காய், புளி, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை நன்றாக ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையாக முருங்கை கீரை துவையல் ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.