தினந்தோறும் சாம்பார், ரசம் என்று சமைத்து போர் அடிக்கிறதா? அப்படியென்றால், வேர்க்கடலை கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப்பரான ரெசிபியை தயாரித்துப் பாருங்கள். இந்த வேர்க்கடலை தக்காளி துவையலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக, பச்சை வேர்க்கடலையில் 24 கிராம் புரதம், 46 கிராம் கொழுப்புச் சத்து, 16 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் நார்ச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க தேவையான மக்னீசியம், காப்பர் உள்ளிட்டவையும் இதில் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்கவும் பெரிதும் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை,
தனியா,
சீரகம்,
எண்ணெய்,
தக்காளி,
பூண்டு,
பச்சை மிளகாய்,
புளி,
கல் உப்பு,
மஞ்சள் தூள்,
தண்ணீர்,
வெங்காயம்,
உளுத்தம் பருப்பு,
கடுகு,
பெருங்காயத்தூள்,
சிவப்பு மிளகாய் மற்றும்
கறிவேப்பிலை.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பச்சை வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். வேர்க்கடலையின் நிறம் மாறியதும், இத்துடன் தனியா, சீரகம் சேர்த்து வறுத்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
இப்போது, அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இந்த தக்காளி வதங்கும் வரை வேகவைக்க வேண்டும். இதன் பின்னர், சுமார் 2 நிமிடங்கள் கழித்து கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும்.
இவை அனைத்தும் ஆறியதும், வறுத்த வேர்க்கடலை மற்றும் தக்காளி கலவையை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதன் பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக அரைய விட்டு எடுக்க வேண்டும்.
இப்போது, தாளிப்பு கரண்டியில் லேசாக எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலக்க வேண்டும். இதையடுத்து, அடுப்பை அணைத்து விடலாம். இதனை துவைலுடன் சேர்த்து கலந்தால் சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல் தயாராகி விடும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும்.