நம்முடைய அன்றாட உணவில் புரதச்சத்து (புரோட்டீன்) மிகவும் அவசியம் ஆகும். அசைவம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும், அதிகப் புரதச்சத்து தேவைப்படுபவர்களுக்கும் சோயா ஒரு சிறந்த மாற்று வழியாக உள்ளது. அந்த வகையில், சோயாவை வைத்து ஒரு சுவையான கிரேவி செய்வது எப்படி என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சோயா சங்ஸ் (Soya Chunks) - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1.5 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், சோயா சங்ஸ்களைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, சோயாவை நன்கு பிழிந்து, தண்ணீர் இல்லாமல் தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இப்படிச் செய்வதால் சோயாவில் இருக்கும் பச்சை வாசனை நீங்கி விடும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை ஒரு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அடுத்ததாக, நறுக்கிய தக்காளியை சேர்க்கலாம். தக்காளி நன்றாக குழையும் வரை, அதனை வதக்கவும்.
இப்போது அடுப்பை சிம்மில் வைத்து, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய அனைத்தையும் சேர்க்கலாம். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் இதனை வதக்கவும். மசாலா அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியமாகும்.
மசாலா வதங்கிய பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு, இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை சேர்க்க வேண்டும். தயிரைச் சேர்த்த பிறகு, கட்டி விழாமல் நன்றாக கலக்க வேண்டும்.
இதையடுத்து, பிழிந்து வைத்துள்ள சோயா சங்ஸ்களைக் கடாயில் சேர்க்கலாம். சோயாவில் மசாலா நன்கு ஒட்டும் வரை கலந்து விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பின்னர் மூடி போட்டு, ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். சோயா, மசாலாவை நன்கு உறிந்து, கிரேவி போன்று கெட்டியாகும்.
இறுதியாக, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, ஒரு முறை கலந்துவிட்டு அடுப்பை அணைத்தால், சுவையான மற்றும் புரதச்சத்து நிறைந்த சோயா கிரேவி தயாராகி விடும்.
இந்த கிரேவி சப்பாத்தி, தோசை ஆகியவற்றுக்கு மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக, அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சரியான அளவில் புரதச்சத்தை கொடுக்கும்.