கோடை சீசன் வந்தாலே பலரும் குளிர்பானங்களை குடிப்பார்கள். ஆனால், செயற்கையான குளிர்பானங்கள் குடிப்பதனால் உடலின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், இயற்கையான பானங்கள் பருக வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அந்த வகையில், சுவையான மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நுங்கு சர்பத் எப்படி தயாரிக்கலாம் என்று இதில் காணலாம். இதனை செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இதன் செய்முறையும் மிக எளிதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
நுங்கு,
எலுமிச்சை சாறு,
சர்பத் சிரப்,
சர்க்கரை,
சப்ஜா விதைகள் மற்றும்
தண்ணீர்
செய்முறை:
முதலில் தேவையான அளவு நுங்கை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை பிரிக்க வேண்டும். இதன் பின்னர், நுங்கின் மேற்புறம் இருக்கும் தோலை சீவ வேண்டும். இப்போது, நுங்கு தண்ணீருடன் சேர்த்து நுங்கை மசிக்க வேண்டும்.
இத்துடன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு சர்க்கரை, மூன்று டேபிள் ஸ்பூன் சர்பத் சிரப் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குளிர்ச்சி தரும் சுவையான நுங்கு சர்பத் தயாராகி விடும்.
இப்போது, ஒரு கிளாஸில் ஊற வைத்த சப்ஜா விதைகள், கொஞ்சமாக ஐஸ் கட்டி ஆகியவற்றுடன் சர்பத்தை கலந்து பரிமாறலாம். இதன் சுவைக்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள்.