சில வகையான உணவு வகைகள் குறிப்பிட்ட ஊரில் மட்டும் கிடைக்கும். அந்த வகையில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சீராளம் என்ற உணவு பிரசித்தி பெற்றது. நான்கு வகையான பருப்புகள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சத்தான சீராளத்தை எவ்வாறு செய்யலாம் என்று தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு,
கடலை பருப்பு,
உளுத்தம் பருப்பு,
பச்சரிசி,
காய்ந்த மிளகாய்,
தண்ணீர்,
உப்பு,
எண்ணெய்,
கடுகு,
சீரகம்,
பெரிய வெங்காயம்,
கறிவேப்பிலை,
துருவிய இஞ்சி,
பெருங்காயத்தூள்,
தேங்காய் மற்றும்
கொத்தமல்லி
செய்முறை:
ஒரு கப் பாசி பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு கப் பச்சரிசி மற்றும் காரத்திற்கு ஏற்ற வகையில் காய்ந்த மிளகாய்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக கழுவிய பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
அடுத்தபடியாக, இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி சுமார் 20 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்க வேண்டும். இவ்வாறு வேக வைத்த பின்னர், இவை அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
இத்துடன் வெட்டி வைத்திருக்கும் பருப்பு இட்லியை போட்டு அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளற வேண்டும். இவ்வாறு செய்தால் ருசியான சீராளம் தயாராகி விடும்.