கோடை காலம் வந்தாலே, அனல் காற்றும், தாகமும் வாட்டி வதைக்கும். ஆனால், இயற்கையின் பரிசாக சில பழங்கள் இந்த வெப்பத்தில் இருந்து நம்மை காக்கின்றன. அத்தகைய பழங்களில் முந்திரிப் பழம் மிகவும் முக்கியமானது. இதனை "கொல்லாம் பழம்" என்றும் அழைக்கின்றனர். இனிப்பும், லேசான துவர்ப்பு சுவையும் இந்தப் பழத்தில் இருக்கின்றன. இந்தப் பழம் கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கிறது.
முந்திரிப் பழம் வெறும் சுவைக்காக மட்டும் அறியப்படுவதில்லை. இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக, கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் பி, இரும்புச் சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை.
இதில் வைட்டமின் சி சத்து மிக அதிகளவில் உள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களைப் பாதுகாத்து நோய் வராமல் தடுக்க உதவுகின்றன.
நார்ச்சத்து அதிகளவில் இருப்பதாலும், நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், முந்திரிப் பழத்தை உட்கொள்வது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக அமையும்.
கோடை காலங்களில் இந்தப் பழத்தைச் சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், முந்திரிப் பழம் இரத்த சோகையைப் போக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாகும்.
முந்திரிப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும் உதவி செய்கிறது. சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கே வழங்கும் இந்தப் பழம், நம் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.