வல்லாரைக் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ஞாபக சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும். உடலில் ஏற்படும் வெளி மற்றும் உள் புண்களை விரைவில் குணமாக்கும் குணம் வல்லாரைக்கு உண்டு. தொண்டைக் கட்டு, காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க வல்லாரைக் கீரை உதவுகிறது.
அதுமட்டுமின்றி வல்லாரை உடல் சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள், மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. பிரசவத்திற்குப் பின் தாயின் உடல்நிலை விரைவில் தேற, வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டுடன் கலந்து கொடுக்கலாம்.
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்குவதன் மூலம் குடல் புண், குடல் நோய்கள், வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்கும். இது பொதுவாக இதயத்திற்குப் பலம் தருவதோடு, தாது விருத்திக்கும் உதவுகிறது. மேலும், இரத்த சோகையைப் போக்கி, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரைக் கீரையின் அனைத்துப் பலன்களையும் பெற, அதை ருசியான துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வல்லாரைக் கீரை
புளி
வர மிளகாய்
நறுக்கிய வெங்காயம்
கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள்
உப்பு, எண்ணெய்
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், புளி, மற்றும் வல்லாரைக் கீரை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய கலவையை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். பின்னர், அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.