/indian-express-tamil/media/media_files/2025/05/26/KVTkFwMM8so2lmzQYOfq.jpg)
சைவ உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு வத்தக் குழம்பு மிகவும் பிடிக்கும். அதன்படி, சுவையான வத்தக் குழம்பு செய்முறை குறித்து தனது யூடியூப் சேனலில் சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பெரிய வெங்காயம் சேர்க்காமல் வத்தக் குழம்பு வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்,
கடலை பருப்பு,
உளுந்தம் பருப்பு,
மிளகு,
வெந்தயம்,
சீரகம்,
காஷ்மீர் மிளகாய்,
காய்ந்த மிளகாய்,
பச்சரிசி,
கறிவேப்பிலை,
சின்ன வெங்காயம்,
பூண்டு,
தக்காளி,
மஞ்சள் தூள்,
தண்ணீர்
புளி கரைசல் மற்றும்
சுண்டைக்காய்
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இத்துடன் இரண்டு டீஸ்பூன் கடலை பருப்பு, இரண்டு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, அரை டீஸ்பூன் மிளகு, அரை டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் சீரகம், ஆறு டீஸ்பூன் தனியா சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
அதன் பின்னர், நான்கு காஷ்மீர் மிளகாய், பத்து காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் பச்சரிசி மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும். இதையடுத்து, இவை அனைத்தையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இனி, அதே கடாயில் மீண்டும் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய், 30 சின்ன வெங்காயம், 10 பூண்டு சேர்த்து வறுக்க வேண்டும். இத்துடன் 120 கிராம் தக்காளி, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும். மேலும், 50 மிலி தண்ணீர் சேர்க்கலாம்.
இப்போது, முதலில் தயாரித்து வைத்திருந்த மசாலாவுடன் சேர்த்து, இந்த பொருட்களை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதன் பின்னர், அடுப்பில் இருக்கும் கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 4 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், புளி கரைசல், அரை லிட்டர் தண்ணீர், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, வெல்லம் மற்றும் அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து கலக்க வேண்டும்.
இவை நன்றாக கொதித்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இத்துடன் சுண்டைக்காயை தாளித்து ஊற்றினால், சுவையான வத்தக் குழம்பு தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.