/indian-express-tamil/media/media_files/2024/12/26/Uw4fEzjuq2qQBnvmtBUT.jpg)
மனித உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு என்பது முக்கியமான ஒன்று. சத்தான உணவை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதே சமயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, 3 வேளையும் ஒவ்வொரு வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். நகரத்தில் காலையில், இட்லி தோசை, மதியம் சாப்பாடு, இரவில் சப்பாத்தி, தோசை, என 3 வேளையும் தனித்தனியாக உணவு சாப்பிடும் நடைமுறை இருக்கிறது.
அதே சமயம், கிராமத்தில், 3 வேளையும் அரிசி சாதத்தை சாப்பிடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் சர்க்கரை நோய் தாக்கம் இருந்தால் அரிசி சாதம் சாப்பிட கூடாது என்ற நிலையும் உள்ளது. இதனால் என்ன உணவு சாப்பிடலாம் என்ற என்ற கேள்வியும் இருந்து வரும் நிலையில், இரவு உணவில் இட்லி சாப்பிடலாமா அல்லது அரிசி சாதம் சாப்பிடலமா என்ற கேள்வி சாதாரணமாகவே எழுகிறது. இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து, டாக்டர் அருண் கார்த்திக் பதில் அளித்துள்ளார்.
சாதம் அரிசியில் இருந்து வருகிறது என்றாலும், இட்லியும் அரிசி மாவில் இருந்து தான் செய்யப்படுகிறது. ஆனால் இட்லி செய்யும்போது அதில் உளுந்து மாவும் சேர்த்துவிடுகிறோம். இதனால் அதன் க்ளைசீமிக் இண்டக்ஸ் குறைந்துவிடுகிறது. ஆனால் அரிசியில் இருக்கும் க்ளைசீமிக் இண்டக்ஸ் அதிகம். கலோரிகளும் அதிகம். இதன் காரணமாக இது உடலில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தும்.
இட்லியில் க்ளைசீமிக் இண்டக்ஸ் குறைவாக உள்ளது. இதில் கலோரிகளும் குறைவு என்பதால், இரவில் இட்லி தோசை சாப்பிடுவதும், அரிசி சாதம் சாப்பிடுவதும் ஒன்று கிடையாது. இரவில் சாதம் சாப்பிடும் பழக்கம் குறிப்பாக இறுதியில் ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதை அப்படியே நிறுத்திக்கொண்டு, ரச இட்லி சாப்பிட்டுக்கொள்ளுங்கள். இதை சாப்பிடும்போது சுவைக்கும், ஜீரணத்திற்கும் சரியாக இருக்கும். சர்க்கரையும் உடலில் அதிகரிக்காது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.