பொதுவாக பள்ளிப் படிப்பை 18 வயதில் நாம் அனைவரும் முடித்து விடுவோம். வெகு சிலருக்கு இந்த ஒன்றிரண்டு வயது கூட குறைய இருக்கலாம். ஆனால் கேரள மாநிலம் கொல்லத்தில், 105 வயது பாகீரதி அம்மா, இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். என்னப் படிப்பு என யோசிக்கிறீர்களா? 105 வயதான அவர் கேரள மாநிலத்தில் பழைமையான பள்ளி மாணவியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
இன்றைய செய்திகள் Live : புதுக்கோட்டை இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி
தற்போது 74.5 சதவீத மதிப்பெண்ணுடன் நான்காம் வகுப்பு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் முடிவை கேரள மாநில எழுத்தறிவு மிஷன் (கே.எஸ்.எல்.எம்) புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கே.எஸ்.எல்.எமின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் முதலில் லிட்ரஸி ஒர்க்கர் கே.பி. வசந்தகுமாரிடம் பாகீரதியின் தேர்வு முடிவை தெரியப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். "தன்னுடைய முடிவை அறிந்து மிகவும் உற்சாகமாகியிருக்கிறார் பாகீரதி அம்மா. சில நாட்களுக்கு முன்பு வயது தொடர்பான சில பிரச்சினைகள் காரணமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரது தேர்வு முடிவுகளைப் பற்றி அவர் கவலைப்பட்டார்” என்றார் வசந்தகுமார்.
”எனது தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது உடல்நலம் அனுமதித்தால் அடுத்த கட்டத்தையும் முயற்சிக்க விரும்புகிறேன்” என்றார் பாகீரதி. தேர்வில் முயன்று வெற்றி பெற்ற பிறகு, பெண்கள் தாங்கள் நிறுத்திய படிப்பை மீண்டும் தொடர ஊக்குவிக்கும் வகையில் பாகீரதி கே.எஸ்.எல்.எம் பிராண்ட் அம்பாஸிடராகியிருக்கிறார். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட பாகீரதி, தனது இளைய மகளை வயிற்றில் சுமந்துக் கொண்டிருந்தபோது, 30 வயதில் கணவரை இழந்தார்.
நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ள தனது பெரிய குடும்பத்தின் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியிருந்தது. தற்போது, அவர் தனது இளைய மகள் தங்கமணியுடன் (70) திரிக்கருவ பஞ்சாயத்தில் உள்ள பிரக்குளத்தில் வசித்து வருகிறார். தேர்வு மையத்தில் தேர்வெழுத அவர் உடல் ஒத்துழைக்காத காரணத்தால், 2019 நவம்பரில் பஞ்சாயத்து உறுப்பினர் முன்னிலையில் தனது வீட்டிலேயே தேர்வெழுதியிருக்கிறார்.
இஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விபத்து, 3 பேர் பலி
லிட்ரசி தேர்வில் 100-க்கு 98 மதிப்பெண்கள் எடுத்த அலப்புழாவின், செப்பாட்டைச் சேர்ந்த 96 வயதான கார்த்தியானி அம்மா தான், தனது அம்மா பாகீரதிக்கு மிகப்பெரிய உந்துதல் என்று அவரது மகள் தங்கமணி கூறினார். பாகீரதி அம்மா தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரிக்கருவ பஞ்சாயத்துத் தலைவர் கே.சந்திரசேகர பிள்ளை அவரது வீட்டிற்குச் சென்று பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.