மும்பை பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மும்பை நகரத்தில் இருக்கும் கோவந்தி பகுதியைச் சேர்ந்த 197 பள்ளிக் குழந்தைகள் வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
பள்ளியில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட சத்து மாத்திரைகள் உட்கொண்டதன் விளைவாக இந்த பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர்.
197 குழந்தைகளில் 161 பேர் ராஜாவாடி மருத்துவமனையிலும் மீதம் இருக்கும் 36 குழந்தைகளை சதாப்தி மருத்துவமனையிலும் அனுமதித்திருக்கிறார்கள்.
மும்பை பள்ளி மாணவி பலி
பைகன்வாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த சாந்தினி சாய்க் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். செவ்வாய் கிழமையன்று தேசிய நோய் எதிர்ப்பு திட்டத்தின் கீழ் அப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
அதனை உட்கொண்ட சாந்தினி அன்று மாலை ஒவ்வாமை காரணமாக இரத்த இரத்தமாக வாந்தி எடுத்திருக்கிறார்.
உடலுக்கு சரியில்லாத நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் பள்ளி சென்று வந்த சாந்தினி நேற்று இரவு (09/08/2018) உயிரிழிந்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அவரின் உயிரிழப்பிற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருந்தால் அவரின் பிரேத பரிசோதனைக்குப் பின்னே தான் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ஜாதவ்.
சாந்தினியின் மறைவினை அடுத்து அருகில் இருக்கும் பெற்றோர்கள் வரிசையாக தங்களின் குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இன்று மதியம் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளில் 22 பேரை சோதித்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் மருத்துவர்கள். அவர்கள் அனைவரும் தலைசுற்றல், வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் மூலமாக குடல்புழுக்களை நீக்கும் முகாம் நடத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.