கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது அந்த நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பலவிதமான பரிசுகளை வழங்கியுள்ளனர்.
மோடிக்கு தரப்பட்ட இந்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கங்கை நதியை சுத்தப்படுத்தும் “Namami Gange" திட்டத்திற்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புது டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ் மையத்தில் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் நேரடியாக இந்த பொருட்கள் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டன. அதே போல் ஜனவரி 29 (நாளை) முதல் 30ஆம் தேதி வரை மின்னணு முறையில் இ-ஏலம் நடத்தப்படுகின்றன.
நாட்டின் பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், தலைப்பாகைகள், நினைவுப் பொருட்கள் உள்ளிட்ட 1,800 பரிசுப் பொருட்கள் இந்த ஏலத்தில் ஏலம் விடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.
குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை இந்த பரிசுப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது கங்கை நதியை சுத்தப்படும் உன்னத திட்டத்திற்காக அளிக்கப்படும் என்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மூலம் ஏலம் எடக்க விரும்புவர்கள் pmmementos.gov.in என்ற இணையதளத்தில் சென்று முழு விபரங்களை காணலாம்.
ஹைலட் பீஸ்:
இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கபடுவது முன்னாள் பாஜக எம்பி நரசிம்மன் மோடிக்கு வழங்கிய 2.22 எடை கொண்ட வெள்ளித்தட்டு. அதே போல், தங்க மூலாம் பூசப்பட்ட கிருஷ்ணன் - ராதை சிலை.இந்த இரண்டு பொருட்களையும் ஏலத்தில் எடுக்க பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.