தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரையும், குஜராத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரையும் மும்பை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: 2 youths arrested for sending threatening emails to Mukesh Ambani
கடந்த வாரத்தில், முகேஷ் அம்பானியிடம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த ஐந்து மின்னஞ்சல்கள் முகேஷ் அம்பானிக்கு வந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞன் கணேஷ் ரமேஷ் வனபர்த்தி நவம்பர் 1 ஆம் தேதி காலை 10.32 மணியளவில் ரூ. 500 கோடி கேட்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பினார் என காம்தேவி போலீசார் தெரிவித்தனர். கணேஷ் ரமேஷ் வனபர்த்தி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நவம்பர் 8 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
“இந்த மிரட்டல் அந்த வாலிபர் செய்த குறும்பு என்று தெரிகிறது. இருப்பினும் எங்கள் விசாரணை நடந்து வருகிறது, இந்த விஷயத்தின் மூலத்தை பெற நாங்கள் முயற்சிப்போம்,” என்று மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினார்.
இரண்டாவது குற்றவாளியை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் மற்றும் அவர் குஜராத்தை சேர்ந்த பி.காம் பட்டதாரி என்று போலீசார் தெரிவித்தனர். ”shadabkhan@mailfence.com என்ற மெயில் ஐ.டி மூலம் தொழிலதிபர் அம்பானிக்கு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய குஜராத்தைச் சேர்ந்த நபரை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று மும்பை குற்றப்பிரிவின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இமெயில் ஐ.டியின் ஐ.பி முகவரியை வைத்து கணேஷ் ரமேஷ் வனபர்த்தியை கண்டுபிடித்ததாக காம்தேவி போலீசார் தெரிவித்தனர். வாரங்கலில் உள்ள எஸ்.ஆர்.பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது இருப்பிடத்திற்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.500 கோடி கேட்டு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவரது மொபைல் போனை போலீசார் சோதனையிட்டனர்.
"அவரது அனுப்பிய கோப்புறையிலிருந்து மின்னஞ்சல் நீக்கப்பட்டு இருந்தது. அவரது மின்னஞ்சலை விரிவாகச் சரிபார்த்தபோது, அவரது குப்பைக் கோப்புறையிலிருந்து அந்த மின்னஞ்சலை மீட்டோம்” என்று போலீஸார் சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கணேஷ் ரமேஷ் வனபர்த்தியின் மொபைல் போன் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஷதாப் கான் என்பவர் அக்டோபர் 27 அன்று அம்பானிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் முதல் மிரட்டல் மின்னஞ்சலில், "நீங்கள் (அம்பானி) எங்களுக்கு ரூ. 20 கோடி கொடுக்கவில்லை என்றால், நாங்கள் உங்களைக் கொன்று விடுவோம், இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் எங்களிடம் உள்ளனர்," என்ற கூறப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் எம்.டி. அம்பானிக்கு மற்றொரு மின்னஞ்சல் வந்தது, அதில் மின்னஞ்சல் அனுப்பியவர், முதல் மின்னஞ்சல் தவறானது என்று கூறி, தங்களுக்கு ரூ. 200 கோடி தேவை என்று மிரட்டல் விடுத்துள்ளார். "கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மரண வாரண்ட் (அம்பானிக்கு) வழங்கப்படும்" என்று இரண்டாவது மின்னஞ்சல் கூறுகிறது.
திங்களன்று, மிரட்டி பணம் பறிப்பவர் அம்பானியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐ.டி.,க்கு ரூ 400 கோடி கேட்டு மூன்றாவது மின்னஞ்சலை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் இது போன்ற மேலும் இரண்டு மின்னஞ்சல்கள் அவருக்கு வந்தன.
"மற்ற அனைத்து மின்னஞ்சல்களும் shadabkhan@mailfence.com இலிருந்து அனுப்பப்பட்டிருந்தாலும், சமீபத்திய மின்னஞ்சல்களில் ஒன்று ganeshvanaparthi91@gmail.com என்ற ஜிமெயில் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டது" என்று ஒரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“