Vallabh Ozarkar
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமலாக்க இயக்குனரகம் (ED), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் வருமான வரித் துறை (IT Dept) ஆகிய மூன்றும் வலுவான கட்சிகள் என்று பா.ஜ.க.,வைத் தாக்கி, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத்துக்கு அளித்த பேட்டியில் உத்தவ் தாக்கரே இதனைத் தெரிவித்தார். நேர்காணலின் முதல் பகுதி புதன்கிழமை சாமானாவில் வெளியிடப்பட்டது மற்றும் கட்சியின் சமூக ஊடக சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க அரசுக்கு எதிரான காங்கிரஸின் நம்பிக்கை இல்லா தீர்மானம்; மக்களவை சபாநாயகர் ஏற்பு
“பல வருடங்களுக்குப் பிறகு, இந்த நாட்டில் என்.டி.ஏ என்ற அமீபா இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்தேன். இந்தியா என்று அழைக்கப்படும் நாட்டின் தேசபக்தி தலைவர்களின் கூட்டணியை எதிர்கொள்ள, நமது பிரதமர் திடீரென 36 கட்சிகளின் (பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதி) கூட்டத்தைக் கூட்டினார். உண்மையில், அவர்களுக்கு 36 கட்சிகள் தேவையில்லை. தற்போது, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ ஆகிய மூன்று கட்சிகள் தேசிய ஜனநாயக் கூட்டணியில் வலுவாக உள்ளன,” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
”சிவசேனா மற்றும் அகாலிதளம் போன்ற பழைய கூட்டணி கட்சிகள் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன, மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துக் கொண்ட சில கட்சிகளுக்கு ஒரு எம்.பி கூட இல்லை,” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
ஜூலை 18-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 36 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதே நாளில் காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள், மற்றும் சிவசேனா (UBT) உள்ளிட்டவை பெங்களூரில் சந்தித்தன. இந்தக் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்று பெயரிடப்பட்டது.
மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் குறித்து மத்திய அரசை கடுமையாக சாடிய உத்தவ் தாக்கரே, பிரச்சினையை தீர்க்க மணிப்பூருக்கு ஏன் பிரதமர் மோடி செல்ல விரும்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
”மணிப்பூர் நமது நாட்டின் ஒரு பகுதி என்பதால் மணிப்பூரை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன். மணிப்பூர் (நாட்டை விட்டு) பிரியும் தருவாயில் இருப்பதாக நான் அஞ்சுகிறேன். மணிப்பூரில் இரட்டை எஞ்சின் (பா.ஜ.க) அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
“இப்போது, இரண்டு மாநிலங்கள் (மணிப்பூர் மற்றும் காஷ்மீர்) பற்றி எரிகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் உறுதியற்ற நிலை உள்ளது. காஷ்மீரில் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலை நடத்த அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் 2024 நாட்டிற்கு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்று கூறுகிறேன். இந்த (பா.ஜ.க) அரசாங்கம் 2024 இல் மீண்டும் வந்தால், இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்து, மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று நான் நினைக்கவில்லை,” என்று முன்னாள் மகாராஷ்டிர முதல்வரான உத்தவ் தாக்கரே கூறினார்.
ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், மாநிலத்திலும் நாட்டிலும் ஜனநாயகத்தை பொதுமக்கள் காப்பாற்ற வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.
பொது சிவில் சட்டம் குறித்து கூறுகையில், நாடு முழுவதும் பசுவதையைத் தடை செய்யும் சட்டத்தை முதலில் கொண்டு வர பா.ஜ.க.,வுக்குத் துணிவு இருக்கா என கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, சட்டம் அனைவருக்கும் சமமாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர் மீது மட்டுமல்லாமல் ஊழல் செய்யும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராகவும் மத்திய அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தேர்தலுக்கு முன்புதான் என்.டி.ஏ முன்னணிக்கு வந்தது என்றும், தேர்தல் முடிந்ததும், என்.டி.ஏ மோடி- அமித் ஷா அரசாக மாறியது என்றும் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil