ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தின் ட்ராங்குல் (அசார்) பகுதியில் புதன்கிழமை வேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: 36 killed as bus falls into gorge in Jammu and Kashmir’s Doda district
அந்த இடத்தைப் பார்வையிட்ட தோடா துணை ஆணையர் ஹர்விந்தர் சிங்கை மேற்கோள் காட்டி, பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், எக்ஸ் தளத்தில் “துணை ஆணையர் #தோடா ஹர்விந்தர் சிங் விபத்து நடந்த இடத்திலிருந்து பகிரும் தகவல்கள் வருத்தமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக 36 பேர் இறந்துள்ளனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்,” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் கூற்றுப்படி, காயமடைந்தவர்கள் தோடா மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். ”விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்றும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. தோடா-படோட் தேசிய நெடுஞ்சாலையில் ராஜ்கருக்கு கிட்டத்தட்ட 4 கிமீ தொலைவில், பேருந்து சாலையை விட்டு சரிந்து 400 அடி கீழே, கைவிடப்பட்ட பழைய சாலையில் விழுந்தது.
இந்த விபத்து குறித்து லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிர்ச்சி தெரிவித்தார். "அசார் பகுதியில் ஒரு சோகமான பேருந்து விபத்தில் உயிர்களை இழந்ததை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்," என்று மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கோட்ட ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“