மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து கடந்த 2-ம் தேதி புறப்பட்ட ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹானாகாவில் சரக்கு ரயில் மீது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து, எதிர் திசையில் வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸும் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Advertisment
இந்தநிலையில், விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் முழு வீச்சல் நடைபெற்றது. இதையடுத்து நேற்று (ஜுன் 7) சீரமைப்பு பணிகள் முடிந்து 1500 பயணிகளுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தனது வழக்கமான பயணத்தை கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை இடையே தொடங்கியது.
38 வயதான பயணி ஷேக் முருதீன் 12841 கோரமண்டல் விரைவு ரயில் பல முறை பயணித்துள்ளதாக கூறினார். ஆனால் நேற்று புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் ஏறுவதற்கு முன் பிரார்த்தனை செய்தாக கூறினார். மேற்கு வங்க மாநிலம் பாங்கரில் வசிக்கும் முருதீன் கூலி வேலைக்காக வாரந்தோறும் சென்னை சென்று வருவதாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ரயில் விபத்துக்குள்ளான கடந்த வெள்ளிக்கிழமை ரயில் பயணம் செய்ய திட்டமிருந்தது. ஆனால் நான் மற்றும் எனது உறவினர்கள் 17 பேர் அன்றைக்கு கோரமண்டல் ரயிலில் ஏறவில்லை. எங்கள் திட்டம் தாமதமானதால் நாங்கள் பயணம் செய்யவில்லை. அதன்பிறகு ரயில் விபத்துக்குள்ளான செய்தியை பார்த்தோம். அதிர்ச்சியடைந்தோம். நானும் தனது குடும்பத்தினரும் விபத்துக்குள்ளான அதே ஜெனரல் பெட்டி 2-ல் பயணிக்க இருந்தோம் என்று கூறினார்.
Advertisment
Advertisements
மேலும் அவர் கூறுகையில், எங்களுக்கு வேறு வழி இல்லை. பயணம் செய்தாக வேண்டும். சென்னையில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதுதான் எங்களது தேவைகளைச் சமாளிக்க ஒரே வழி. ரயில் எங்கள் வாழ்க்கை. நாங்கள் தவிர்க்க நினைத்தாலும் அது எங்களால் முடியாது என்றார்.
நேற்று புதன்கிழமை, கோரமண்டல் விரைவு ரயிலில் 1,477 பேர் பயணம் செய்தனர். மேலும் ஜெனரல் பெட்டியில் அதிகப்படியான கூட்டம் இருந்தது.
ரயிலின் எஸ் 5 பெட்டியில் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தை சேர்ந்த புல்லட் ஷா (33) என்பவர் பயணம் செய்தார். அவர் ரயில் பயணத்திற்கு முன் ஹனுமான் சாலிசா பாடுவதைக் கேட்ட முடிந்தது.
“ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இது என்பதால் இதில் நான் பயணிக்கிறேன். வாழ்க்கை நிச்சயமற்றது. மக்கள் ஏசி அறைகளில் இருக்கும் போதும் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஆடம்பர வாழ்க்கை எங்களிடம் இல்லை என்றார்.
இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தென்னிந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த ரயில் விருப்பமான தேர்வாக உள்ளது. 17 நிலையங்களில் நின்று செல்லும்.
ஷாலிமாரில் கோரமண்டல் ரயில் வருவதற்கு முன்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பைகளை வரிசையில் வைத்துள்ளனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் ஸ்வீட்டி குமாரி)
ஷாலிமார் ஸ்டேஷன் மாஸ்டர் கூறுகையில், கோரமண்டல் எப்போதும் சரியான நேரத்தில் இயக்கப்படும். நேரத்தை கடைபிடிக்கும். ஆண்டு முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். அதானல் தான் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படுகிறது என்றார்.
ரயிலில் பி1 ஏ.சி பெட்டியில் பீகாரின் கதிகார் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பூஜா குமாரி பயணம் செய்தார். ரயில் ஒவ்வொரு முறையும் குலுங்கும் போது என் இதயம் நின்று துடிக்கிறது. நான் பத்திரமாக சென்னை அடைய வேண்டும் என்று எம்.ஏ பட்டம் வாங்கப் பயணிக்கும் குமாரி கூறினார்.
பயணிகளில் இருந்த ஓய்வுபெற்ற TTE (பயண டிக்கெட் பரிசோதகர்) கங்கா மோண்டல், தனது பணி நாட்களில் அடிக்கடி கோரமண்டலில் பணியமர்த்தப்பட்டதை நினைவு கூர்ந்தார். 5 நாட்களில் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது பாராட்டுக்குரியது," என்று மொண்டல் கூறினார், அவர் தனது மகளுடன் சென்னைக்கு பயணம் செய்தார்.
தெற்கு 24 பர்கானாஸைச் சேர்ந்த ஜஹரானா பீபி (26) தனது மூன்று வயது குழந்தையைத் தன் மடியில் வைத்து சமநிலைப்படுத்திக் கொண்டு, தன்னைப் போன்ற பலர் ஏன் தினமும் ரயிலில் செல்கிறார்கள் என்பதை விளக்கினார். “வங்காளத்தில் வேலை இல்லை; சில நேரங்களில் நீங்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் கூட கிடைக்காது. சென்னையில் செங்கல் சூளையில் தினமும் 700-800 ரூபாய் கூலி கொடுக்கிறார்கள். நம் வாழ்க்கை அவ்வளவு மதிப்பு வாய்ந்தது அல்ல. நாங்கள் பயந்தால் சாப்பிட முடியாது என்றார்.
இரவு 9.30 மணியளவில், விபத்து நடந்த பஹானாகா பகுதியை ரயில் கடந்தது. பயணிகள் விபத்து நடந்த பகுதியை காண ஜன்னல்களில் குவிந்தனர். பலர் தங்கள் போனில் வீடியோ எடுத்தனர். ரயில் அப்பகுதியில் கடக்கும் வழக்கமான 130 கி.மீ வேகத்திற்குப் பதிலாக, புதன்கிழமை இரவு மிகவும் மெதுவான வேகத்தில் கடந்து சென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“