ஒடிஷா மாநிலத்தில் முதலையிடமிருந்து தன் சகோதரியை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.
ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகளான அசந்தி தலாய் (வயது 10) மற்றும் மமதா தலாய் (வயது 6) இருவரும், கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் வீட்டருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது, குளத்திலிருந்து 5 அடி நீளமுள்ள பெரிய முதலை நீரிலிருந்து வெளியேறி அசந்தியை தாக்கியது.
இதனால், அதிர்ச்சியடைந்த தங்கை மமதா, பயத்தில் பின்வாங்காமல் தனது சகோதரியின் கையை வலுவாக பிடித்து இழுத்தார். இதனால், முதலை தன் கட்டுப்பாட்டை இழந்ததால், மமதா போராடி தன் சகோதரியை கரைக்கு மீட்டு கொண்டுவந்தார்.
இதனால், அசந்திக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு ஆற்றுக்குள் விட்டனர்.
6 வயது சிறுமி மமதாவின் வீரத்தை பாராட்டி அவருக்கு தேசிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை வரும் 24-ஆம் தேதி குடியரசு தினமன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். இந்த விருது, மமதா உள்ளிட்ட 18 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.