மாநிலங்களவையில் நேற்று(23.3.18) நடைப்பெற்ற 25 எம்பி பதவிகளுக்கான தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 9 இடங்களின் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 25 எம்.பிக்களின் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் நேற்று(23.3.18) நடைப்பெற்றது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 58 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 25 இடங்களுக்கான தேர்தல் நேற்று பரப்பரப்பாக நடந்து முடிந்தது. நேற்று மாலையே, வெற்றி பெற்றவர்களின் விபரமும் அறிவிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்பட 11 பேர் போட்டியிட்டனர். மேற்கு வங்காளத்தில் 5 இடங்களுக்கு 6 பேரும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 5 பேரும், தெலுங்கானாவில் 3 இடங்களுக்கு 4 பேரும், ஜார்கண்டில் 2 இடங்களுக்கு 3 பேரும், சத்தீஸ்காரில் ஒரு இடத்துக்கு 2 பேரும் போட்டியிட்டனர்.
விருவிருப்பான வாக்குப்பதிவு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக குமாரசாமி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில், அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் ஆகியோர் அடங்கும்.
அதே போல், சமாஜ்வாதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வெற்றி பெற்றார்.மக்களவை இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் சமாஜ்வாடிக்கு ஆதரவு அளித்து, தேர்தல் முடிவையே மாற்றிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாநிலங்கள் அவை தேர்தலில் தோல்வியே கிடைத்தது.
மேலும், கேரளாவில் இடது சாரிகள் ஒரு இடத்தையும், தெலங்கானாவில் ராஷ்டிரிய சமிதி மூன்று இடங்களையும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூன்று இடங்களையும், கர்நாடகாவில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், பா.ஜ.க ஒரு இடத்தையும், சட்டீஸ்கரில் பா.ஜ.க ஒரு இடத்தையும், ஜார்கண்டில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின.
உத்தரபிரதேச மாநிலத்தில், 9 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, பெரும் மகிழ்ச்சியை தருவதாக அம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.