நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது. எனவே, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு, மாநில சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 45 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ஜிப்மர், ஒருவர் பிம்ஸ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 படுக்கைகள் தயார்: இது குறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள காசநோய் அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் கோரிமேட்டில் உள்ள காசநோய் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 பேர் குணமடைந்துள்ளனர். என்றார்.