A migrant who walked from Chennai to home in UP passed away before he reaches home
A migrant who walked from Chennai to home in UP passed away before he reaches home : கடந்த 2 மாதங்களாக புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்கு உரிய வகையில் இருக்கிறது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, பலர் தங்களின் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடிவு செய்து நடக்க துவங்கியுள்ளனர். பலர் பத்திரமாக வீடு போய் சேர்வார்களா என்ற சந்தேகம் தான் இன்றைய சூழலில் ஏற்பட்டு வருகிறது. சுட்டெரிக்கும் வெயில். உணவு, நீர், ஓய்வு பெற இடமின்றி நடந்து கொண்டே இருக்கிறார்கள் இந்த மக்கள். இவர்களின் உழைப்பு இன்றி இங்கு ஒரு கட்டிடம் கூட உருவாகாது என்பது உண்மை தான். ஆனாலும் இம்மக்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
Advertisment
சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த உ.பி.யை சேர்ந்த மூன்று நபர்களுக்கும் வேலை பறிபோன நிலையில், உ.பி.க்கு நடந்து செல்ல முடிவு மேற்கொண்டனர். தர்மேந்தர் யாதவ் (27), ஜெயப்பிரகாஷ் (26) மற்றும் பன்ச்சு குமார் (24) இவர்கள் மூவரும், வாரணாசி மாவட்டத்தில் உள்ள, ஆசம்கரின் புவனா கிராமத்தை சேர்ந்தவர்கள். சென்னையில் இருந்து வழியில் கிடைக்கும் லாரிகளிலும் சில நேரங்களில் கால்நடையாகவும் உ.பி.யை அடைந்துள்ளனர்.
ஆனால் 2000 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் தங்களின் இருப்பிடத்தை நோக்கி பயணப்பட்ட அவர்கள் வாரணாசி மாவட்ட எல்லையை நேற்று காலை அடைந்தனர். மொஹவ் ஐந்துவழி நெடுஞ்சாலையில் பயணமான அவர்கள், பயணக் களைப்பில் ஆசம்கர் காவல்துறை சோதனைச் சாவடி அருகே ஓய்வு எடுத்தனர். அப்போது தர்மேந்தர் சோர்வுற்று மயங்கி அங்கேயே சரிந்தார். இதனை கண்டு மற்றவர்கள் அலற, சோதனைச்சாவடியில் பணியாற்றிய காவல்துறையினர் தர்மேந்தரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனாலும் தர்மேந்தர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணத்தை தழுவினார். அவரின் உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அவர் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் வீட்டில் ஈமக்காரியத்திற்கான பணம் கூட இல்லாத நிலையில், காவல்துறையினர் பணம் கொடுத்து உதவியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“