புதுச்சேரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பு செல்வன் (33). ஓட்டுனரான இவர் தனது 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம், மங்களபுரி நகர் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றங்கரையில் நேற்று முன் தினம் மதியம் ஆற்றில் குளித்தனர்.அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அன்பு செல்வன் திடீரென நீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அன்பு செல்வனை மீட்க முயன்றனர்.
அவர் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் வில்லியனுார் போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போட் மூலம் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர். நேற்று மதிய முதல் இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அன்பு செல்வனின் சடலம் கரை ஒதுங்கியது. வில்லியனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.