Advertisment

ஹைதராபாத் பல்கலை. தேர்தல்; தலைவர் பதவிக்கு முதன்முறையாக முஸ்லீம் பெண்ணை களமிறக்கும் ஏ.பி.வி.பி

ஹைதராபாத் பல்கலைக்கழக தேர்தல் வரலாற்றில் முதல் முஸ்லீம் பெண் தலைவர் வேட்பாளராக ஆயிஷா; ஏ.பி.வி.பி அறிவிப்பை சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கை என போட்டி மாணவர் அமைப்புகள் விமர்சனம்

author-image
WebDesk
New Update
University of Hyderabad

ஹைதராபாத் பல்கலைக்கழகம்

Rahul V Pisharody

Advertisment

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஷேக் ஆயிஷாவை வேட்பாளராக நிறுத்த ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) முடிவு செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, மத்திய பல்கலைக் கழகத்தில் நடக்கும் இந்தத் தேர்தலில் ABVP ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும்.

ஆங்கிலத்தில் படிக்க: ABVP’s ‘vocal face’ Ayesha, first Muslim woman running for top post in University of Hyderabad

இந்திய மாணவர் கூட்டமைப்பு, அம்பேத்கர் மாணவர் சங்கம் மற்றும் பழங்குடி மாணவர் மன்றம் (SFI-ASA-TSF) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளின் கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்ட முகமது அதீக் அகமது உட்பட மூன்று வேட்பாளர்களை ஆயிஷா எதிர்கொள்வார்.

ஏ.பி.வி.பி.,யின் நடவடிக்கை ஆயிஷாவை வெளிச்சத்தில் வைத்துள்ளது, மேலும், இந்த நடவடிக்கை மாணவர் வசதிகள் முதல் பெல்லோஷிப்கள் வரை, தேர்தல் விவாதங்களில் பேசப்படும் பல்வேறு தீவிர பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளியுள்ளது. சேவா லால் வித்யார்த்தி தளம் (எஸ்.எல்.வி.டி) உடன் கூட்டணி வைத்து ஏ.பி.வி.பி தேர்தலில் போட்டியிடுகிறது.

வேதியியல் துறையில் முனைவர் பட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிஷா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர், தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.பி.வி.பி பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். போட்டி மாணவர் அமைப்புகள் ஆயிஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை "டோக்கன் பிரதிநிதித்துவம்" மற்றும் "சிறுபான்மையினரை திருப்திப்படுத்த" என்று கூறினாலும், ஆயிஷா பல ஆண்டுகளாக தங்களது அமைப்பின் "கார்யகர்த்தா" என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வளாகத்தில் "மிகவும் குரல் கொடுக்கும்" செயல்பாட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்றும் ஏ.பி.வி.பி கூறிவருகிறது. ஏ.பி.வி.பி மட்டுமல்ல, பல்கலைக்கழக வரலாற்றில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் முஸ்லிம் பெண் இவர்தான். அவர் களத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார், ஏ.பி.வி.பி அதை மதிக்கிறது,” என்கிறார் ஆராய்ச்சி அறிஞரும் ஏ.பி.வி.பி.,யின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷ்ரவன் பி ராஜ்.

தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது "இன்ப அதிர்ச்சி" அளிக்கிறது என்று கூறும் 24 வயதான ஆயிஷா, தேர்தலில் தான் முன்வைக்கும் பிரச்சினைகளில் பெண்களுக்கு அதிகாரம், வளாக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வளாகத்தில் இணக்கமான சூழ்நிலையை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும் என்று கூறுகிறார். கல்வி மற்றும் செயல்பாட்டினை ஒன்றாகச் செய்ய வேண்டும் என்ற தேசத்தின் முதல் கொள்கை என்னை ஏ.பி.வி.பி.,க்கு ஈர்த்தது. சமூக ஈடுபாடு கொண்ட தேசியவாத மாணவர் செயல்பாட்டிற்கு ஏ.பி.வி.பி இடம் அளிக்கிறது என்பதை என்னால் சான்றளிக்க முடியும். ஏ.பி.வி.பி.,யின் உள்ளடக்கிய தன்மையை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்,” என்று ஆயிஷா கூறுகிறார்.

வளாகத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில், மெஸ், விடுதி கட்டிடங்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற உள்கட்டமைப்புகளின் சீரழிவு அடங்கும் என்று ஆயிஷா கூறுகிறார். "மாணவர்கள் மெஸ்ஸில் நின்று சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், விடுதி அறைகள் வாழ முடியாதவை, மற்றும் புதர்கள் மற்றும் செடிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி பொது இடங்களை ஆபத்தானதாக ஆக்குகிறது. மேலும், வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களுக்கு இடையே சீரற்ற உள்கட்டமைப்பு உள்ளது. நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளுக்கான தேவை உள்ளது. வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு வளாகங்களுக்கு இடையிலான தொடர்பும் மாணவர்களின் கவலைகளில் ஒன்றாகும், ”என்று ஆயிஷா கூறுகிறார், 2018 முதல் தலைமையில் இருக்கும் தற்போதைய SFI-ASA தலைமையிலான மாணவர் சங்கத்தையும் ஆயிஷா விமர்சித்தார்.

தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளராக, ஆயிஷா பல்வேறு துறைகள், விடுதிகள் மற்றும் பொது இடங்களில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதாக உறுதியளித்தார், அதே நேரத்தில் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் விடுப்பு மற்றும் வருகை தளர்வு ஆகியவற்றை முன்மொழிந்தார். தேசியவாத குழுக்கள் "தவறாக புரிந்து கொள்ளப்பட்டவை" மற்றும் "அச்சம் தூண்டுதலால் பாதிக்கப்பட்டவர்கள்" என்று கூறி, வளாகத்தில் "சமாஜிகா சமரஸ்யா" (சமூக நல்லிணக்கம்) மையத்தை அமைக்க முன்மொழிந்துள்ளார்.

இருப்பினும், அவரது எதிர்ப்பாளரான SFI இன் அதீக் அகமது, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் AVBP இன் "டோக்கன் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை" புரிந்துக் கொள்வார்கள் என்று கூறுகிறார். பிரச்சினை முஸ்லிம் அல்லது பெண் பிரதிநிதித்துவம் பற்றியது அல்ல. இதற்கெல்லாம் எஸ்.எஃப்.ஐ முன்னோடியாக இருந்துள்ளது. 6,000 மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தலைவர் தீர்வு காண வேண்டும், எங்கள் சாதனைகள் மற்றும் நாங்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து மாணவர்களுக்குத் தெரியும்,” என்று உருது துறையின் முனைவர் அதீக் அகமது கூறுகிறார்.

SFI-ASA-TSF குழு, பல்கலைக்கழகத்திற்கான குறைக்கப்பட்ட நிதிக்கு எதிராக போராடுகிறது, இது கட்டண உயர்வு மற்றும் சுயநிதி படிப்புகளை அறிமுகப்படுத்த வழிவகுத்தது, இது தவிர இடஒதுக்கீடுகளை முறையாக செயல்படுத்த வலியுறுத்துகிறது. அரசுகளின் அனைத்து மாணவர் விரோதக் கொள்கைகளுக்கும், வளாகத்தில் ஏ.பி.வி.பி.,யின் குண்டர்த்தனத்துக்கும் எதிராக நாங்கள் இருந்தோம். வேறு எந்த மாணவர் அமைப்பும் அவர்களுடன் கூட்டணி வைக்காததால், அவர்கள் (ABVP) முற்போக்கு முகமூடியை அணிய முயற்சிக்கிறார்கள். இது பின்னடைவை ஏற்படுத்தும்,” என்கிறார் எஸ்.எஃப்.ஐ.,யின் வளாகப் பிரிவின் பொதுச் செயலாளர் ஜி மோஹித்.

மாணவர் சங்கக் குழுவில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாதது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது என்று சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த ஃபசீஹ் அகமது கூறுகிறார். அவரது அமைப்பு தலித் மாணவர் சங்கம், முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு, பகுஜன் மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் அகில இந்திய OBC சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக ஜனநாயகத்திற்கான கூட்டணியின் (ASD) ஒரு பகுதியாகும். பல வருடங்களாக தலைமை பொறுப்பில் இருந்தும், வளாகத்தில் ஏ.பி.வி.பி.,யை எதிர்க்க SFI இன்னும் அழைப்பு விடுத்து வருகிறது. அது அவர்களின் தோல்விஎன்று ஃபசீஹ் அகமது கூறுகிறார். ஏ.எஸ்.டி.,யின் தலைவர் வேட்பாளர் உமேஷ் அம்பேத்கர், சகிப்பின்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தனது வேட்பாளர்கள் குழு செயல்படும் என்று கூறுகிறார். கட்டணம் உயர்த்தப்பட்டாலும், பெல்லோஷிப்களில் உயர்வு இல்லை. இடஒதுக்கீடு கொள்கையை முறையாக அமல்படுத்தவில்லை. பல உள்கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன. வளாக சூழ்நிலை நாளுக்கு நாள் சகிப்புத்தன்மையற்றதாக மாறி வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

காங்கிரஸின் மாணவர் பிரிவு NSUI இந்த முறை மாணவர்களுக்கு நான்கு "உத்தரவாதங்களை" வழங்கியுள்ளது. அதன் தலைவர் வேட்பாளர் அமல் ஜோஸ் பிலிப், மாணவர் சங்கங்கள் மற்றும் கிளப்புகளின் அங்கீகாரம், கலாச்சார நிகழ்வுகளை நடத்துதல், பாலினம் மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கான கொள்கையை உருவாக்குதல் மற்றும் நூலகத்தை மேம்படுத்துதல், ஹாஸ்டல் மெஸ்களை நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றிற்காக தனது குழு செயல்படும் என்று கூறுகிறார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஒரு மத்திய பல்கலைக்கழகமாக 1974 இல் நிறுவப்பட்டது. ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகள் முதல் பி.எச்.டி படிப்பவர்கள் வரை கிட்டத்தட்ட 5,300 மாணவர்கள், மாணவர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தற்போதைய தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் ஹைதராபாத் பல்கலைக்கழகத் தேர்தல்களில் ஒரு நிழலை ஏற்படுத்தினாலும், பல்கலைக்கழக அதிகாரிகள் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், ஹைதராபாத் பல்கலைக்கழகம் வாக்கெடுப்புக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை வளாகத்தில் நடைபெற்ற தலைவர் பதவிக்கான விவாதம், மூடிய கதவுகளில் நடத்தப்பட்டு ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Abvp University Of Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment