Actor Prakash Raj : பிரபலமான தென்னிந்திய நடிகர் மற்றும் தேசிய விருது வாங்கிய நடிகருமான பிரகாஷ் ராஜ், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஜனவரி 1ம் தேதி கூறினார். எந்த தொகுதியில் நிற்கின்றேன் என்பது குறித்தும், கட்சியின் பெயர் மற்றும் இதர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எந்த தொகுதியில் நின்று போட்டியிடுகிறார் என்ற விபரத்தை அளித்துள்ளார்.
மத்திய பெங்களூருவில் இருந்து போட்டியிடும் பிரகாஷ் ராஜ்
மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் அரசியலில் இறங்குவது குறித்து, ஆம் ஆத்மி கட்சி தங்களின் வாழ்த்துகளையும் வரவேற்பினையும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் டெல்லியின் துணை முதல்வர் சிசோடியா “நல்ல மனிதர்கள் எல்காம் அரசியலுக்கு வர வேண்டும். பிரகாஷ் ராஜ்ஜின் இந்த முடிவினை நாங்கள் வரவேற்கிறோம்” என்று பெங்களூருவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் வரவேற்பிற்கு நன்றிகளை பதிவு செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பின்பு, மக்கள் சந்திக்குக்கும் பிரச்சனைகள் குறித்து மிகவும் தைரியமாக கேள்வி எழுப்பி வந்தார் பிரகாஷ் ராஜ். பிரதமர் குறித்து நிறைய பேசுவதால் என்னை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் தயக்கம் கொள்கிறார்கள் என வெளிப்படையாக பேசியவர் பிரகாஷ் ராஜ்.