தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஷோபனா மக்களவைத் தேர்தலில் கேரளாவில் முக்கியக் கட்சியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க செல்வாக்கு மிக்க மாநிலங்களில் மட்டுமல்ல, பலவீனமாக உள்ள மாநிலங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு இணையாக பா.ஜ.க-வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கேரளா மற்றும் தமிழ்நாடு மீது தனி கவனம் செலுத்தி வரும் பா.ஜ.க, வரும் மக்களவைத் தேர்தலில் ஒரு சில இடங்களையாவது வெற்றிகொள்ள வேண்டும் என்று இலக்காகக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கேரளாவின் திருச்சூரில் கடந்த ஜனவரி 3-ம் தேதி பா.ஜ.க சார்பில் பிரம்மாண்ட மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதுமட்டுமல்ல, திருச்சூர் நகரம் முழுவதும் அவர் வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி கடந்த ஜனவரி 17-ம் தேதி கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருப்ரயார் ராமசாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அதற்கு முன்பு ஜனவரி 16-ம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடத்தி வரும் யாத்திரையைப் போலவே, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் கடந்த ஜனவரி 27-ம் தேதி பாத யாத்திரையை தொடங்கினார். அவரது பாத யாத்திரை திருவனந்தபுரத்தில் பிப்ரவரி 28-ம் தேதி நிறைவடைகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்களில் 3-வது முறையாக கேரளாவுக்கு செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளாவின் 10 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில், பிரபலங்கள் சிலரின் பெயர்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, நடிகை ஷோபனா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷோபனா பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஊடகங்களில் ஊகங்கள் உலா வந்தன. ஏனென்றால், கடந்த ஜனவரி 3-ம் தேதி திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகை ஷோபனாவும் பங்கேற்றார். அப்போதே அவர் பா.ஜ.க வேட்பாளராக முன்னிறுத்தப் படுவது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போல, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி-யாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சசி தரூர் பதவி வகிக்கிறார். வரும் தேர்தலில் அவரே மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசி தரூர் நாயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை எதிர்த்து அதே சமூகத்தை சேர்ந்த சுரேஷ் குமார் களமிறக்கப்பட்டால் கடுமையான போட்டி நிலவக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மனைவி நடிகை மேனகா. இவர்களுக்கு ரேவதி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் என இரு மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.