/indian-express-tamil/media/media_files/2025/04/30/4w9TJsTX2ub3NJrxVwLu.jpg)
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அவர் கூறியதாவது, நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பட்ஜெட்டில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
எவ்வித மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் சுமார் 70 ஆயிரம் குடும்பத்தலைவிக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாயில் இருந்து மாதம் கூடுதலாக ரூ.1500 உயரத்தி ரூ,2500-ஆக வழங்கப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்திற்கு கூடுதலாக ஆண்டுக்கு சுமார் ரூ.126 கோடி செலவாகும். அதே போன்று மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள எவ்வித உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் சுமார் ஓரு லட்சம் குடும்ப தலைவிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த மாதம் 10 கோடி ரூபாய் என ஆண்டுக்கு ரூ.120 கோடி தேவை. இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் கூட இன்றுவரை அரசால் விநியோகம் செய்யவில்லை.
விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள் என மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் உதவித் தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அவரவர் பெறும் உதவித் தொகையில் ரூ.500 இந்த பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு கூடுதலாக 108 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவாகும்.
அதே போன்று மீனவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதே போல் அனைத்து பிரிவு மக்களுக்கும் ஈமச்சடங்கு நிதியை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
மேலும் திருமண உதவித்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. சமூக நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் உயர்த்தி அறிவிக்கப்பட்டதை செயல்படுத்த ஆண்டுக்கு சுமார் ரூ.400 கோடி கூடுதல் செலவாகும். இத்திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
தேர்தல் நெருங்கி வரும் இவ்வேலையில் மாண்புமிகு முதலமைச்சரால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு போதிய கூடுதல் நிதி வருவாய் அவசியம் தேவை. அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி கசிவை தடுத்து நிறுத்தினால் இத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும். ஆனால் அரசு அதை செய்யாமல் வேறு பாதையில் கவனம் செலுத்துகிறது.
தற்போதைய கலால்துறை கொள்கையில் சிறு மாற்றம் கொண்டு வந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தை அரசே செயல்படுத்தினால் சுமார் ரூ.750 கோடிக்கு மேல் வருமானம் உயர்வு வரும். ஆனால் இதை செயல்படுத்தாமல் மதுபான விற்பனை உரிமத்திற்கான கட்டணம் மற்றும் மதுபான விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ.90 கோடி அளவிற்கு வரி உயர்வை அறிவித்துள்ளனர். இது முழுக்க முழுக்க நுகர்வோர் தலையில் விழும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மாநிலத்தில் நில மதிப்பீடு உயர்த்தப்படவில்லை. நில மதிப்பீடு உயர்த்தப்படாததால் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. பத்திரப்பதிவு துறை, கலால்துறை, போக்குவரத்து துறை, விற்பனை வரித்துறை ஆகியவற்றில் ஏற்படும் நிதி கசிவை நேர்மையான வழியில் தடுத்து முறைப்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.1250 கேடிக்கு மேல் கூடுதல் வருவாய் வரும். இதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
60 வயதுக்குள் மரணம் அடையும் குடும்பத் தலைவருக்கு ராஜீவ்காந்தி காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு 30 ஆயிரமும், விபத்தினால் மரணம் அடைந்தவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகார போக்கை ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தார்.
தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு காங்கிரஸ் கட்சியை இரண்டு முறை தோல்வியுற செய்தார். கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை அதிமுக பாஜக கூட்டணியுடன் இணைந்து இரண்டே இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் வெற்றி பெற கூடிய ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தி காங்கிரசை முழுமையாக துடைத்தெரிந்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் .நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் அவரை நாங்கள் சேர்த்துக்கொள்ளமாட்டோம். துரோகிகளுக்கு இடமில்லை என சகட்டுமேனிக்கு தமாஷ் நடிகர் போன்று பேசியுள்ளார்.
வேறு கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவர் எப்பொழுது தான் காங்கிரஸ் கட்சிக்கு வருவதாக கூறினார் என்பதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வேறு கட்சிக்கு போய்விட வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.