/indian-express-tamil/media/media_files/2025/06/02/0VM72Cl0VmlueN6VOIye.jpeg)
தமிழக தி.மு.க அரசு ரயில் பாதை அமைத்திட தேவையான இடங்களை வழங்காமல் அலட்சியத்துடன் இருந்துள்ளது. இதனால் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துள்ளது. தி.மு.க அரசின் அலட்சியத்தை அ.தி.மு.க கண்டிக்கிறது என புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று (ஜூன் 2) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் ரயில் வழித்தடம் திட்டம் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையான அ.தி.மு.க ஆட்சியின் போது மத்திய அரசிடம் வலியுறுத்தியதின் அடிப்படையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த தற்போதைய தமிழக தி.மு.க அரசு ரயில் பாதை அமைத்திட தேவையான இடங்களை வழங்காமல் அலட்சியத்துடன் இருந்துள்ளது. கடந்த ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக மத்திய அரசு சுமார் ரூபாய் 52.13 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆரம்ப கட்ட பணிகளை செய்ய மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அப்படியே ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு புதுச்சேரி வழியாக சென்னை மகாபலிபுரம், கடலூருக்கு புதிய ரயில்வே வழித்தடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து இருந்த நிலையில், அத்திட்டத்தை எதிர்வினை அரசியல் கண்ணோட்டத்துடன் தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு ஒத்துழைக்காமல் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்களுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துரோகம் செய்துள்ளார்.
புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவு திட்டத்தை தி.மு.க அரசு சிதைத்துள்ளது. தமிழக கடற்கரை ஓர மக்களின் நலன், தி.மு.க அரசின் அலட்சியப் போக்கால் சிதைக்கப்பட்டுள்ளது. தமிழக திமுக அரசின் தமிழர் விரோத போக்கை புதுச்சேரி அ.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரி மாநிலம் உள்ளடக்கிய இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்த முன்வராத தமிழக தி.மு.க நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு இதில் உள்ள உண்மை நிலையை புதுச்சேரி அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை துணை நிலை ஆளுநரும், முதலமைச்சரும் எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தி.மு.க அரசு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இருமல், சளி, தும்மல் அதிக அளவில் உள்ளது.
அசாதாரணமான சூழ்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு வாரங்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம். புதுச்சேரி அரசு பள்ளி கல்வி துறையும், சுகாதார துறையும் அலட்சியம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கொடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரன் உள்ளிட்ட இன்னும் பல நபர்கள் மற்றும் பெயர் தெரியாத மிகப்பெரிய பொறுப்பில் உள்ள நபரும் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மகளிர் விரோத தி.மு.க அரசால் ஞானசேகரன் மட்டும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி மேல்முறையீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அ.தி.மு.க வலியுறுத்துகிறது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரை தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜூனாவுக்கு நாவடக்கம் தேவை. இவ்வாறு அன்பழகன் கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.