'கலவரங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தான் காரணம்'; பா.ஜ.க எம்.பி கருத்துக்கு ஜே.பி. நட்டா கண்டனம்

ஜே.பி. நட்டாவின் கண்டனத்திற்கு பின்னர், "நான் கட்சியின் ஒழுக்கமான உறுப்பினர். கட்சி என்ன கூறுகிறதோ அதன்படியே நடப்பேன்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் துபே தெரிவித்துள்ளார்.

ஜே.பி. நட்டாவின் கண்டனத்திற்கு பின்னர், "நான் கட்சியின் ஒழுக்கமான உறுப்பினர். கட்சி என்ன கூறுகிறதோ அதன்படியே நடப்பேன்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் துபே தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nadda and Dubey

பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்றத்தின் மீது கடுமையான கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, நாட்டில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தான் காரணம் என்று அவர் விமர்சித்தார். நிஷிகாந்த் துபேவின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜே.பி. நட்டா, அவரது இந்த வாதத்தை பா.ஜ.க முற்றிலும் நிராகரிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: After BJP’s Dubey says CJI behind ‘civil wars’, J P Nadda says told him not to make such statements

 

Advertisment
Advertisements

முந்தைய நாள், துபே தனது ஏ.என்.ஐ வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில் வக்பு சட்ட திருத்த மசோதா மற்றும் மேற்கு வங்க கலவரம் குறித்து தனது கருத்துகளை துபே கூறியிருந்தார். அதில், "நாட்டில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தான் காரணம்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளையும் அவர் விமர்சித்தார். வக்பு சட்ட திருத்த மசோதாவில் இருக்கும் அம்சங்களை நிறுத்தி வைப்பது மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக குடியரசு தலைவருக்கு காலக்கெடுவை அமைத்தது உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருந்தார். அந்த வகையில், "உச்சநீதிமன்றம் சட்டத்தை இயற்றினால், நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டியது தான்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இவ்வாறு பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் ஜே.பி. நட்டா தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதில், "நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பா.ஜ.க எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா கூறிய கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். இத்தகைய கருத்துகளை பா.ஜ.க ஏற்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. இந்த கருத்துகளை பா.ஜ.க முற்றிலும்  நிராகரிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"பா.ஜ.க எப்போதும் நீதித்துறையை மதித்து, அதன் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறது. ஏனெனில், உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். இவை, நமது அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் வலுவான தூண் என்று நாங்கள் நம்புகிறோம். இது போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட இருவருக்கும், மற்ற அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஜே.பி. நட்டா கூறினார்.

எனினும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

தனது கருத்துகளை பொதுவெளியில் கூறுவதற்கு முன்பாக, கட்சியுடன் இது குறித்து ஆலோசிக்கவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் துபே தெரிவித்துள்ளார். ஜே.பி. நட்டாவின் இந்த கண்டனத்திற்கு பிறகு துபேவை தொடர்பு கொண்ட போது, "நான் கட்சியின் ஒழுக்கமான போர் வீரன். கட்சி என்ன கூறுகிறதோ அதன்படியே நான் நடப்பேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய துபே, "உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்த மூன்று மாத காலக்கெடு எங்கு இருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லுங்கள்? எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மூன்று மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்கலாம். நாடாளுமன்றம் தான் அரசியலமைப்பைத் திருத்த முடியும். இது தங்களுடைய வேலை என்று நீதிமன்றம் நம்பினால், நாடாளுமன்றத்தையும், சட்டசபையையும் கலைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தனது ஏ.என்.ஐ வீடியோவையும் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டார். நீதிபதிகள் நியமனங்களுக்கான தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) சட்டம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறுகிறார். 2014 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட NJAC சட்டம் அடுத்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

"இந்த நாட்டின் சட்டங்களை நாடாளுமன்றம் உருவாக்குகிறது. அந்த நாடாளுமன்றத்திற்கு நீங்கள் ஆணையிடுவீர்களா? குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் உரிமைகள் என்ன என்பது எங்களிடம் எழுத்துப்பூர்வமாக உள்ளது. நீங்கள் இந்த நாட்டை அராஜகத்தை நோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்" என அவர் தெரிவித்திருந்தார்.

"எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் இல்லை. அதிகபட்ச நீதிபதிகள் சவர்ணா குழுக்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நினைத்தபடி எல்லாம் செயல்பட முடியாது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அவர் கூறியிருந்தார்.

ஜார்க்கண்டில் நான்கு முறை எம்.பி-யாக இருந்த துபே, செப்டம்பர் 2024 முதல், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், வர்த்தகத்திற்கான குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் விமர்சித்திருந்தார்.

துபேவின் கருத்துகளுக்கு பதிலளித்த காங்கிரஸ், பா.ஜ.க வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்தை குறிவைத்து பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டியது. "அரசியல் சாசனப் பதவிகளில் இருப்பவர்கள், அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க எம்.பி-க்கள் கூட உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள். சட்டங்களை இயற்றும் போது, ​​அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராகச் செல்ல வேண்டாம் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறுகிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். "உச்ச நீதிமன்றத்தை குறிவைக்க வேண்டுமென்றே பல்வேறு குரல்கள் எழுகின்றன என்பது தெளிவாகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Jp Nadda

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: