/indian-express-tamil/media/media_files/2025/06/25/axiom-4-2025-06-25-09-12-44.jpg)
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம்-4 (Axiom-4) விண்வெளிப் பயணத்திட்டம், இறுதியாக இன்று (ஜூன் 25) விண்ணில் ஏவப்படத் தயாராக உள்ளது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று சக விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் இந்த விண்கலம், இந்திய நேரப்படி நண்பகல் 12 மணியளவில் கென்னடி விண்வெளி மையத்தின் வளாகம் 39A-விலிருந்து விண்ணை நோக்கிப் பாயும்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
சுமார் 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, இந்த விண்கலம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 4:30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, விண்வெளி வீரர்கள் சுமார் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
முன்னதாக ஜூன் 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டது. மே 29 ஆம் தேதி முதலில் திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், ஏவுகணை வாகனத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஸ்வெஸ்டா மாடுலில் (Zvezda module) ஏற்பட்ட மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் பலமுறை தாமதமானது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஸ்வெஸ்டா மாடுலில் 2019 ஆம் ஆண்டிலேயே கசிவு கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்ய விண்வெளி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன. ஆக்சியம்-4 பயணத்திற்கு முன்னதாக இந்த பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
"விண்வெளி நிலையத்தின் அமைப்புகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் சார்ந்து இருப்பவை. எனவே, கூடுதல் குழு உறுப்பினர்களை வரவேற்பதற்கு விண்வெளி நிலையம் தயாராக இருப்பதை நாசா உறுதிசெய்ய விரும்புகிறது. மேலும், தரவுகளை மதிப்பாய்வு செய்ய தேவையான நேரத்தை நிறுவனம் எடுத்துக்கொள்கிறது" என்று நாசா ஜூன் 22 ஆம் தேதி பயணத்தை ஒத்திவைக்கும்போது கூறியிருந்தது.
"சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவை சரிசெய்த பிறகும், அனைத்து அமைப்புகளும் சரியாக உள்ளதா என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனம் சோதிக்க வேண்டியிருந்தது. இந்த கூடுதல் தாமதத்திற்கு இதுவே காரணம்" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் (SpaceX Dragon) விண்கலத்தின் மின்சார இணைப்புகளில் ஏற்பட்ட சிக்கல்கள், பால்கன்-9 (Falcon-9) ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவு மற்றும் மோசமான வானிலை போன்ற காரணங்களாலும் இந்த பயணம் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது.
'Realize the Return' என்ற கருப்பொருளுடன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இந்த நான்காவது தனியார் பயணத்தில், 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டில், விங் கமாண்டர் ராகேஷ் சர்மா சோவியத் சல்யூட்-7 விண்வெளி நிலையத்தில் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் தங்கியிருந்தார்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "1984 இல் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றபோது, இந்தியாவிடம் ஒரு ஏவுதளம் கூட இல்லை. முதல் ஏவுதளம் 1993-யிலும், இரண்டாவது 2005-யிலும் தான் அமைக்கப்பட்டது. இப்போது, நமது சொந்த மனித விண்வெளி பயணத்திற்கு நாம் தயாராகி வருகிறோம். இந்தியா இப்போது ஆராய்ச்சியிலும் முன்னணியில் உள்ளது" என்று கூறினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில், தனது குழுவினரால் "ஷக்ஸ்" என்று அழைக்கப்படும் சுபான்ஷு சுக்லா, இந்தியாவிற்காக ஏழு முக்கிய சோதனைகளை நடத்துவார். மேலும் பல சர்வதேச ஆய்வுகளிலும் பங்கேற்பார். விண்வெளி நிலையத்திலிருந்தபடியே, அவர் மாணவர்கள், கல்வியாளர்கள், பிரமுகர்கள் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் விண்வெளித் துறையின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடுவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.