Jayprakash S Naidu
காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை சத்தீஸ்கரின் சர்குஜாவில் நடந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: After Pitroda remarks, PM Modi's new attack: ‘Cong ki loot — zindagi ke saath bhi, zindagi ke baad bhi’
“அரச குடும்ப இளவரசரின் ஆலோசகரும், அரச குடும்ப இளவரசரின் தந்தையின் ஆலோசகரும் நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இப்போது இவர்கள் ஒரு படி மேலே சென்றுவிட்டனர். காங்கிரஸ் இப்போது ‘பரம்பரை வரி’ விதிக்கப் போவதாகச் சொல்கிறது. அது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்திற்கு வரி விதிக்கும். உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது. காங்கிரஸின் நகங்கள் அதையும் உங்களிடமிருந்து பறித்துவிடும். காங்கிரஸ் மந்திரம்: காங்கிரஸ் கி லூட், ஜிந்தகி கே சாத் பீ, ஜிந்தகி கே பாத் பீ (காங்கிரஸ் கொள்ளையடிக்கும், வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்). நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் உயிருடன் இல்லாத போது, அது உங்களுக்கு பரம்பரை வரியைச் சுமத்திவிடும். காங்கிரஸ் கட்சி முழுவதையும் தங்கள் மூதாதையரின் சொத்தாகக் கருதி, அதைத் தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்தவர்கள், இந்தியர்கள் தங்கள் சொத்தை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை விரும்பவில்லை,” என்று மோடி கூறினார்.
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடாவின் நேர்காணல் வெளிச்சத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே இந்த கருத்துக்கள் வந்தன. அந்த நேர்காணலில் அமெரிக்காவில் பரம்பரை வரி என்பது ஒரு சுவாரஸ்யமான சட்டம் மற்றும் அந்தக் கொள்கையை இந்தியாவில் கொண்டு வருவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியிருந்தார்.
"அமெரிக்காவில், பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் $100 மில்லியன் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும் போது, அவர் தனது குழந்தைகளுக்கு 45% சொத்துக்களை மட்டுமே கொடுக்க முடியும் மற்றும் 55% அரசாங்கத்திற்கு செல்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். உங்கள் தலைமுறையில் நீங்கள் செல்வம் சம்பாதித்தீர்கள், இப்போது வெளியேறுகிறீர்கள், நீங்கள் உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும், அனைத்தையும் அல்ல, அதில் பாதி, என்று அந்தச் சட்டம் சொல்கிறது, இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது. இந்தியாவில், உங்களிடம் அந்த நடைமுறை இல்லை. ஒருவர் 10 பில்லியன் மதிப்புடைய சொத்துக்களை வைத்துள்ளார் மற்றும் அவர் இறந்தால், அவரது குழந்தைகள் 10 பில்லியன் பெறுகிறார்கள், மக்களுக்கு எதுவும் கிடைக்காது... எனவே, இந்த வகையான கொள்கைகளை மக்கள் ஆலோசிக்க மற்றும் விவாதிக்க வேண்டும்," என்று சாம் பிட்ரோடா கூறினார்.
சாம் பிட்ரோடா கருத்துகள் பா.ஜ.க தலைவர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளானதால், அவர் உடனடியாக தெளிவுபடுத்தினார்: “55% பறிக்கப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவில் இப்படிச் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? பா.ஜ.க.,வும் ஊடகங்களும் பீதியில் இருப்பது ஏன்? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் பரப்பும் பொய்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக அமெரிக்காவில் உள்ள பரம்பரை வரி குறித்து ஒரு தனிநபராக நான் கூறியதை கோடி மீடியாக்கள் திரித்து வெளியிட்டது துரதிருஷ்டவசமானது. மங்களசூத்ரா மற்றும் தங்கம் பறிப்பு பற்றிய பிரதமரின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது. டி.வி.யில் எனது வழக்கமான உரையாடலில் அமெரிக்க பரம்பரை வரியை ஒரு உதாரணமாக மட்டுமே குறிப்பிட்டேன். நான் உண்மைகளை குறிப்பிட கூடாதா? மக்கள் விவாதிக்க வேண்டிய மற்றும் ஆலோசிக்க வேண்டிய பிரச்சினைகள் இவை என்று நான் கூறினேன். இதற்கும் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை” என்று சாம் பிட்ரோடா கூறினார்.
மற்ற காங்கிரஸ் தலைவர்களான, பவன் கேரா முதல் ஜெய்ராம் ரமேஷ் வரை, சாம் பிட்ரோடாவின் கருத்துகளுக்கு விளக்கமளிக்க முயன்றனர்.
காங்கிரஸுக்கு எதிரான மோடியின் புதிய தாக்குதல், காங்கிரஸ் கட்சியின் "செல்வ மறுபகிர்வு" என்று சமீபத்திய பேரணிகளில் மோடி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதன் பின்னணியில் வந்துள்ளது.
நேற்று ராஜஸ்தானில் பேசிய மோடி, “உங்கள் சொத்தை கணக்கெடுப்போம், நமது தாய், சகோதரிகள் வைத்திருக்கும் மங்களசூத்திரத்தை கணக்கெடுப்போம் என்று அவர்கள் (காங்கிரஸ்) தேர்தல் அறிக்கையில் எழுதியிருப்பது உங்களுக்குத் தெரியும். எக்ஸ்ரே நடத்தப்படும் என்று அவர்களின் தலைவர் ஒருவர் உரையில் கூறினார். அதாவது, உங்கள் வீட்டிற்குள் பஜ்ரா பெட்டியில் ஏதேனும் இருந்தால், அதுவும் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்படும்…” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“