கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின் தன் குழந்தைகளை அரசியலிலிருந்து விலக்கி வைக்க நினைத்ததாக, சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றபின் சோனியா காந்தி வாழ்த்துரை வழங்கினார். அப்போது, கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு தனது ஆசீர்வாதத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசியதாவது, ”20 ஆண்டுகளுக்கு முன் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். காங்கிரஸ் தலைவராக கடைசி முறை உங்கள் மத்தியில் பேசுகிறேன்.”, என கூறினார்.
அரசியலுக்கு அறிமுகமில்லாமல் தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதாக சோனியா காந்தி தெரிவித்தார். “ஒரு புரட்சிகரமான குடும்பத்திலிருந்து நான் அரசியலுக்கு வந்தேன்.
என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சிறை சென்றவர்கள். அரசியல் தெரியாத நிலையில் ராஜீவ் காந்தியின் மறைவால் அரசியலுக்கு வந்தேன்.”, என கூறினார்.
தனக்கு இந்தியாவையே இந்திரா காந்திதான் அறிமுகப்படுத்தியதாக சோனியா உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். “வெளிநாட்டில் இருந்து வந்தாலும் சொந்த மகளாக நடத்தப்பட்டேன். இந்திராகாந்தியின் கொலை என்னை உலுக்கியது தாயை இழந்ததுபோல உணர்ந்தேன். அதன்பின், எனது கணவர் ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்பட்டதற்கு பின் மொத்த பலமே போய்விட்டது. என் குழந்தைகளை அரசியலைவிட்டு விலக்கி வைக்க நினைத்தேன்.”, என தெரிவித்தார்.
மேலும், ”காங்கிரஸ் தலைவராக முதல்முறை பதவியேற்றபோது பதற்றமானேன். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தனர். தொண்டர்களும், மக்களும் அரசியலில் உறுதுணையாக இருந்தீர்கள். கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த நிறைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மன்மோகன் சிங் பாடுபட்டு ஆட்சியை நிர்வகித்தார். காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்காக உருவாக்கிய சட்டங்கள் பெருமையளிக்கின்றன. இன்று எதிர்கொள்ளும் சவால்களை போல் எப்போதும் எதிர்கொண்டதில்லை. பல தேர்தல்களில் தோல்வியடைந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்”, என தெரிவித்தார்.