நடிகரும், சி.பி.ஐ(எம்) சட்டமன்ற உறுப்பினருமான எம்.முகேஷ் மீது கேரள காவல்துறை வியாழன் அன்று பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தது. நடிகை ஒருவரின் புகாரின் பெயரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குற்றச்சாட்டை அவர் "பிளாக்மெயில் தந்திரம்" என்று மறுத்து, குற்றம் சாட்டியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் பற்றிய நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் முடிவுகளுக்குப் பிறகு, கொல்லம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முகேஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த அறிக்கை வெளிவந்த பிறகு, முகேஷ் பொது நிகழ்ச்சிகள் மற்றும் எதிர்வினைகளில் இருந்து விலகி இருக்கிறார். செவ்வாயன்று, ஒரு பேஸ்புக் பதிவில், அவர் உட்பட அனைத்து திரைப்பட வல்லுநர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து புறநிலை விசாரணைக்கு அழைப்பு விடுத்தார். தனக்கு எதிராக நடிகை ஒருவர் கொடுத்த புகாரை குறிப்பிட்டு முகேஷ், “பணம் கேட்டு என்னை பிளாக்மெயில் செய்ய முயன்றனர். இதுபோன்ற பிளாக்மெயில் தந்திரங்களுக்கு அடிபணிய நான் தயாராக இல்லை. உண்மை வெளிவர வேண்டும். அத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.
Read in english : After Siddique and Ranjith, Kerala Police file rape case against actor-politician M Mukesh
முன்னதாக, நடிகர் சித்திக் மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார்களை அடுத்து போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்தனர். அதற்கு முன், சித்திக் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், ரஞ்சித் கேரள சலசித்ரா அகாடமியின் தலைவர் பதவியிலிருந்தும் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
செவ்வாயன்று, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவர் மற்றும் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் உட்பட 17 பேர் கொண்ட செயற்குழு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
முகேஷ் தவிர, பிரபல நடிகர்கள் ஜெயசூர்யா, எடவேல பாபு, மணியன்பிள்ளை ராஜு, திரைப்படத் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் நோபல் மற்றும் காங்கிரஸ் சார்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வி.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் மீது பல நடிகர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சி.பி.ஐ(எம்) மூத்த தலைவர் பிருந்தா காரத், சிபிஐயின் அன்னி ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி பெண் தலைவர்கள் முகேஷ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்ற வழக்குகளை எதிர்கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.வின்சென்ட் மற்றும் எல்டோஸ் குன்னப்பள்ளி ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கையை நிராகரித்தது.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) கேரள அரசு அமைத்துள்ளது. எஸ்ஐடி குழு செவ்வாய்க்கிழமை கூடி விவாதித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“