குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் ஒன்று லண்டன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனேடிய நாட்டவர் விமானத்தில் இருந்தனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரும் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்க்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருந்துள்ளன. இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு, மாநில முதல்வர்கள் மற்றும் உலக நாட்டின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
மூடல்
இந்நிலையில், ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்தை தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று அதிகாலை அகமதாபாத்திலிருந்து லண்டன், கேட்விக் செல்லும் AI 171 விமானம், விமான நிலையத்திற்கு வெளியே, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியது. இதன் விளைவாக, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாறிவரும் சூழ்நிலையை அதிகாரிகள் நிர்வகிக்கும் போது உங்கள் ஒத்துழைப்பையும் பொறுமையையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும் புதிய தகவல்கள் கிடைத்தவுடன் வழங்கப்படும்”என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விமான விபத்து குறித்த விவரங்களை உறுதிசெய்து வருவதாகவும், விரைவில் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களை வழங்க விமான நிறுவனம் 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளது.