குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்-எஸ்ஜி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இரு வாகனங்ளுக்கு இடையே விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மீட்புப்பணிக்காக போலீசாருடன் அங்கிருந்த மக்கள் சிலர் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் அதிவேகத்தில் வந்த 'ஜாகுவார்' சொகுசு கார் ஒன்று, மக்கள் கூட்டம் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அங்கிருந்த காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
"நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் தற்போது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜாகுவார் காரினால் விபத்துக்குள்ளானது” என்று நகர காவல் கட்டுப்பாட்டு அறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 பேரில் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சோலா சிவில் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கிருபா பட்டேல் கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவரான சத்யா படேல் - கார் டிரைவர் கண்காணிப்பில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். டாக்டருடன் கலந்துரையாடிய பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று டிசிபி டிராஃபிக் வெஸ்ட் நிதா தேசாய் கூறியுள்ளார்.
இஸ்கான் கோவில் அருகே உள்ள மேம்பாலத்தை போலீசார் தற்காலிகமாக மூடியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் இழப்பீடாக மாநில அரசு வழங்கியுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று காலை ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil