புதுச்சேரியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை திறக்க கோரியும், பேருந்தை, பேருந்து நிலையம் உள்ளே எடுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கட்டிமுடிக்கப்பட்டு அரசின் அலட்சியத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசையும், புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அ.தி.மு.க சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (19.03.2025) நடைபெற்றது.
அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், மக்களுக்கு தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வரும் ஆளும் அரசு மற்றும் புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் இறுதியாக பேருந்தை பேருந்துநிலையம் உள்ளே எடுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், பொலிவுறு திட்டத்தின் கீழ் 33 கோடியில் புணரமைக்கப்பட்டு ஒருசில அதிகார மோதலால் இதுவரை புதிய பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளதாகவும், இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் தான், பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், ஒருவார காலத்திற்குள் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக தற்காலிக பேருந்து நிலத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டு பேருந்துகளை உள்ளே அனுமதிக்காமல் போராட்டத்தை நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்