நவம்பரில் நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணிக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒரு மாத தடை விதித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க அல்லது உள் குழுவின் முடிவு வரை சம்பந்தப்பட்ட பயணிக்கு 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாடற்ற பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: சாலை வசதி போன்ற ‘சின்ன பிரச்னை’களை விட லவ் ஜிகாத்-க்கு முன்னுரிமை: கர்நாடக பா.ஜ.க தலைவர்
”விமானத்தின் பணியாளர்களின் ஒரு பகுதியின் குறைபாடுகளை விசாரிக்கவும், "நிலைமையை விரைவாக சரிசெய்வதில் தாமதமான குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் ஒரு உள் குழு அமைக்கப்பட்டுள்ளது", என செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்ட ஒரு பயணி மற்றவரைப் பாதித்த சம்பவம் எங்களுக்குத் தெரியும். விசாரணை மற்றும் புகாரளிக்கும் செயல்பாட்டின் போது பாதிக்கப்பட்ட பயணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம், ”என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீகமான செயல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். போலீஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் விமான நிறுவனத்தின் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளாமல் வெளியேறிவிட்டார். மூத்த குடிமகனான அந்தப் பெண், ஏர் இந்தியா குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுக்குக் கடிதம் எழுதி, குடிபோதையில் சக பயணி தன் மீது சிறுநீர் கழித்துவிட்டு அநாகரீகமாக நடந்துக் கொண்டதாகக் கூறினார்.
“எனது உடைகள், காலணிகள் மற்றும் பைகள் முழுவதுமாக சிறுநீரில் நனைந்தன. பணிப்பெண் என் இருக்கைக்கு வந்தார், அது சிறுநீர் வாசனை என்பதை சரிபார்த்து, என் பை மற்றும் காலணிகளில் கிருமிநாசினியை தெளித்தார். பையில் எனது பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை இருந்தன, மேலும் உள்ளே உள்ள பொருட்களின் பாதுகாப்பை உடனடியாக சரிபார்க்க விரும்பினேன். நான் என் பையை மீட்டெடுக்க உதவி செய்யும்படி பணிப்பெண்ணைக் கேட்டேன், ஆனால் அவர் முதலில் பையைத் தொட மறுத்துவிட்டாள், மேலும் என் காலணிகளை எடுத்து குளியலறையில் நானே சுத்தம் செய்யும்படி சொன்னார்.”
“நான் என் சொந்த பையை சுத்தம் செய்ய ஆரம்பித்ததும், அவர் உதவ ஆரம்பித்தார். மாற்றுவதற்கு பைஜாமாக்கள் மற்றும் செருப்புகள் எனக்கு வழங்கப்பட்டது. உடைகளை மாற்றிய பிறகு, சுமார் 20 நிமிடங்கள் கழிப்பறை அருகே நின்றேன். நான் இருக்கையை மாற்றக் கேட்டேன், ஆனால் இருக்கைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது, ”என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நவம்பர் 26, 2022 அன்று நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியாவிடம் இருந்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) அறிக்கை கேட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அலட்சியமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்காணிப்பு குழு கூறியது, அதே நேரத்தில் ஏர் இந்தியா இந்த விஷயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு உள் குழுவை அமைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil