ஏர் இந்தியா ஜனவரி 27 ஆம் தேதி டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நேற்று ஏர்லைனில் பேலன்ஸ் ஷீட் இறுதி செய்யப்பட்டு மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. டாடா குழும அதிகாரிகள் அதனை மதிப்பாய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, ஏர் இந்தியா முழுமையாக டாடா வசம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
அக்டோபர் 11 ஆம் தேதி, மத்திய அரசு டாடா குழுமத்திற்கு லெட்டர் ஆஃப் இன்டென்ட் (எல்ஓஐ) வழங்கியது. இது விமான நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை மாற்றுவதற்கான விருப்பத்தை உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இடமாற்றத்திற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு டிசம்பர் இறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உலகளாவிய கட்டுப்பாட்டாளர்களிடம் நிலுவையில் உள்ள பல்வேறு ஒப்புதல்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் மற்றும் விமான நிறுவனத்தின் குத்தகைதாரர்களிடமிருந்து பேலன்ஸ் ஷீட்டை இறுதி செய்வதன் காரணமாக காலக்கேடு ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. பேலன்ஸ் ஷீட்டின் இறுதித் தேதி ஜனவரி 20 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குநர் வினோத் ஊழியர்களுக்கு பகிர்ந்துள்ள செய்தியில், ஏர் இந்தியா டாடாவிடம் ஜனவரி 27 ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது. இறுதி செய்யப்பட்ட பேலன்ஸ் ஷீட், ஜனவரி 24 ஆம் தேதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே, புதன்கிழமை டாடா குழுமம் அதனை மதிப்பாய்வு செய்து, புதிய மாற்றங்கள் வரலாம். ஏர் இந்தியா பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு இதுவரை நாம் சிறப்பான பணியைச் செய்துள்ளோம்.
அடுத்த 3 நாள்களுக்கு பணிகள் கடுமையாக இருக்கும். நாம் விலகுவதற்கு முன் இந்த மூன்று-நான்கு நாட்களில் உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கொடுக்கப்பட்ட பணியை முடித்திட, இரவு வெகுநேரம் உழைக்க நேரலாம். இதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்" என தெரிவித்திருந்தார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம், ஏர் இந்தியாவை ரூ18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் ஏலத்தில் எடுத்தது. அதில் ரூ. 15,300 கோடி கடன் பாகமாகவும், ரூ.2,700 கோடி ரொக்க பணமாகவும் அரசுக்கு செலுத்தவேண்டியிருந்தது.
விமான நிறுவனத்தின் பல்வேறு கட்டுப்பாட்டாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் ஒப்புதலுடன் இறுதி பேலன்ஸ் ஷீட் அறிக்கை தயாரிக்கப்பட்டது. டாடா குழுமத்திற்கு வழங்கப்பட்ட இந்த ஷீட்டில் ஜனவரி 20-ம் தேதி வரை, தினசரி ஏர் இந்தியாவுக்கு ஏற்படும் ரூ.20 கோடி இழப்பைக் கணக்கிடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத் துறைகள் மற்றும் அமைச்சகங்கள் ஏர் இந்தியாவிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் வரை 278.49 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தாமல் நிலுவையில் இருப்பது ஆர்டிஐ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில் செப்டம்பர் 2021 நிலவரப்படி 700க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் பிரிவுகளில் இருந்து ரூ.244.78 கோடியும், ஜூலை 27, 2021 நிலவரப்படி VVIP விமானங்களுக்கான ரூ.33.71 கோடியும் அடங்கும்.
இதுமட்டுமின்றி, பிரதமரின் விமானப் பயணங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.7.20 கோடியும், குடியரசுத் தலைவரின் விமானச் செலவு ரூ.6.14 கோடியும் அடங்கும்.
இதற்கிடையில், ஏர்லைன்ஸ் அரசாங்கத் துறைகளில் இருந்து நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிக்கத் ஏற்கனவே தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை 30.38 கோடி ரூபாயை மீட்டெடுத்துள்ளது.
ஏர் ஏஷியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமானமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil